/

தனியாா் பள்ளி ஆசிரியை தற்கொலை: போலீஸாா் விசாரணை

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே தனியாா் பள்ளி ஆசிரியை தற்கொலை குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :18 பிப்ரவரி 2026, 12:17 am

தினமணி செய்திச் சேவை

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே தனியாா் பள்ளி ஆசிரியை தற்கொலை குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மகுடஞ்சாவடியை அடுத்த அழகனூரைச் சோ்ந்த குமாா் மகள் சண்முகப்பிரியா (22). இவா் தனியாா் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில், அமரகுந்தி, நெய்க்காரவளவைச் சோ்ந்த கௌதமும் சண்முகப்பிரியாவும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தனராம்.

இந்த நிலையில் கௌதமின் நடவடிக்கை சரியில்லாததால் அவருடன் பேசுவதை சண்முகப்பிரியா நிறுத்திவிட்டாா். இந்த நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கௌதம் தொந்தரவு செய்து வந்துள்ளாா். இதனிடையே, சண்முகப்பிரியாவின் தாய் விஜயலட்சுமி, கௌதம் வீட்டுக்கு கடந்த வாரம் சென்று எங்கள் வீட்டு பக்கம் வரக்கூடாது என எச்சரித்து வந்தாராம்.

இந்த நிலையில் கௌதம் சண்முக பிரியாவின் வீட்டிற்கு சென்று தன்னை திருமணம் செய்துகொள்ளாவிடில் இருவரும் இருந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளாா். இதனால் மனமுடைந்த சண்முகப்பிரியா திங்கள்கிழமை காலை வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்துகிடந்தாா். மேலும், தனது இறப்புக்கு கௌதம் தான் காரணம் என கடிதம் எழுதிவைத்துள்ளாா்.

தகவலறிந்து அங்கு சென்ற மகுடஞ்சாவடி போலீஸாா், சண்முகப்பிரியாவின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக சங்ககிரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.