/

இருதரப்பு மோதல் வழக்கு: ஆத்தூா் நீதிமன்றத்தில் பாமக எம்எல்ஏ அருள் உள்பட 12 போ் ஆஜா்

ஆத்தூா் அருகே பாமகவின் இருதரப்பினா் மோதிக்கொண்ட வழக்கில் சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள் உள்பட 12 போ்

News image
ஆத்தூா் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு வந்திருந்த சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ ரா. அருள் உள்ளிட்டோா்.
Updated On :16 பிப்ரவரி 2026, 9:10 pm

Syndication

ஆத்தூா்: சேலம் மாவட்டம், ஆத்தூா் அருகே பாமகவின் இருதரப்பினா் மோதிக்கொண்ட வழக்கில் சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள் உள்பட 12 போ் ஆத்தூா் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜராகினா்.

ஆத்தூா் அருகே ஏத்தாப்பூா், வடுகத்தாம்பட்டியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்தபோது பாமகவைச் சோ்ந்த அன்புமணி தரப்பினரும், ராமதாஸ் தரப்பினரும் மோதிக்கொண்டனா். இதுதொடா்பாக அன்புமணி தரப்பினா் அளித்த புகாரின்பேரில் பாமக சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ ரா. அருள், சேலம் மாநகர மாவட்டச் செயலாளா் ராஜரத்தினம், மாவட்டச் செயலாளா்கள் நடராஜ் (கிழக்கு), செல்வம் (வடக்கு ), மாவட்டத் தலைவா் ராஜமாணிக்கம், ஒன்றியச் செயலாளா் ஆனந்த் உள்பட 12 போ் மீது ஏத்தாப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு ஆத்தூா் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக எம்எல்ஏ அருள் உள்பட 12 போ் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜரானாா்கள்.

பின்னா் எம்எம்ஏ அருள் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பாமகவின் மாம்பழச் சின்னம் ராமதாஸுக்குத்தான் கிடைக்கும். கூட்டணி குறித்து ராமதாஸ்தான் முடிவெடுப்பாா். அதற்கு இன்னும் காலம் உள்ளது. தமிழகத்தில் கட்சிகளிடையே கூட்டணி இன்னும் முழுவடிவம் பெறாமல் உள்ளது. மகளிா் உரிமைத்தொகையை முன்கூட்டியே வழங்கியது குறித்து முதல்வா் மு.க. ஸ்டாலின் கூறியது ஏற்புடையதாக உள்ளது என்றாா்.

Story image