/

சேலம் மாவட்டத்தில் 5 மணி நிலவரப்படி 70.19 சதவீத வாக்குப்பதிவு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சேலம் மாவட்டத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 70.19 சதவீத வாக்குகள் பதிவாகின.

News image
நடக்க முடியாதவர்களை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் சைக்கிள் மூலம் வாக்களிக்க அழைத்துச் செல்லும் மாநகராட்சி பணியாளர்
Updated On :1 பிப்ரவரி 2024, 8:27 am

DIN

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சேலம் மாவட்டத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 70.19 சதவீத வாக்குகள் பதிவாகின.

சேலம் மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 6 நகராட்சிகள், 31 பேரூராட்சிகளுக்கு சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. சேலம் மாநகராட்சியில் 60, 6 நகராட்சிகளில் 165 வார்டுகள்,  31 பேரூராட்சிகளில் 474 வார்டுகள் என மொத்தம் 695 வார்டு உறுப்பினர்களுக்கு தேர்தல் நடைபெற்றது.

இதில் பேரூராட்சிகளில் 4 வார்டுகளில் போட்டியின்றி வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 470 வார்டு உறுப்பினர்களுக்கு தேர்தல் நடைபெற்றது. மாவட்டத்தில் 695 வார்டு உறுப்பினர் பதவிக்கு 3206 பேர் போட்டியிடுகின்றனர்.

சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகளில் 709 வாக்குச்சாவடிகளில் 7,30,549 வாக்காளர்களும், நகராட்சிகளில் 273 வாக்குச்சாவடிகளில் 2,28,279 வாக்காளர்களும், பேரூராட்சிகளில் உள்ள 537 வாக்குச்சாவடிகளில் 3,97,490 வாக்காளர்களும் என மொத்தம் 1519 வாக்குச்சாவடிகளில் 13,56,308 வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 1514 வாக்குச்சாவடிகளில் சனிக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள் ஆர்வமாக நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

வாக்குப்பதிவு மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்தளம், சக்கர நாற்காலி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் வாக்காளர்கள் வசதிக்காக சாமியானா அமைக்கப்பட்டிருந்தது.

வாக்குப்பதிவுப் பணியில் மாநகராட்சியில் 3412 பேரும், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் 3916 அலுவலர்களும் ஈடுபட்டுள்ளனர். மேலும் சேலம் மாநகர பகுதியில் 1336 போலீஸாரும், மாவட்ட ஊரக பகுதியில் 2236 போலீஸாரும் என மொத்தம் 3572 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள276 பதற்றமான வாக்குச்சாவடிகளில் 138 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. கூடுதல் போலீஸ் பாதுகாப்புடன் வெப் கேமிரா மூலமும் கண்காணிக்கப்பட்டது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை காலை 9 மணி நிலவரப்படி மாநகராட்சி -12.49, நகராட்சி- 13.07, பேரூராட்சி -13.81 என சராசரியாக மாவட்டத்தில் 12.97 சதவீத வாக்குகள் பதிவாகின.

அதேபோல காலை 11 மணி நிலவரப்படி மாநகராட்சி- 23.84, நகராட்சி -30.44, பேரூராட்சி -32.92 என மாவட்டத்தில் சராசரியாக 27.60 சதவீத வாக்குகள் பதிவாகின.

மதியம் 1 மணி நிலவரப்படி மாநகராட்சி -36.80, நகராட்சி -48.72, பேரூராட்சி-51.60 என சராசரியாக 43.12 சதவீத வாக்குகள் பதிவாகின. மாலை 3 மணி நிலவரப்படி மாநகராட்சி-49.07, நகராட்சி-62.84, பேரூராட்சி-66.14 என சராசரியாக 56.37 சதவீத வாக்குகள் பதிவாகின. மாலை 5 மணி நிலவரப்படி மாநகராட்சி- 63.84, நகராட்சி - 76.41, பேரூராட்சி-78.36 என மாவட்டத்தில் சராசரியாக 70.19 சதவீத வாக்குகள் பதிவாகின. மாலை 5 மணிக்குப் பிறகு கரோனா பாதித்தவர்கள் வாக்களித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.