அரிசி வினியோகிக்க மறுப்பு: ரேஷன் கடைக்குள் விற்பனையாளரை வைத்துப் பூட்டிய பொதுமக்கள்
அரிசி வினியோகிக்க மறுத்ததால் ரேஷன் கடை விற்பனையாளரை


அரிசி வினியோகிக்க மறுத்ததால் ரேஷன் கடை விற்பனையாளரை பொதுமக்கள் கடைக்குள் வைத்துப் பூட்டிய சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மணியனூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ஏ.பி. 067 என்ற எண்ணுள்ள ரேஷன் கடை உள்ளது. மணியனூர், காத்தாயம்மாள் நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் இந்த கடையில் பொருள்கள் வாங்கி வருகின்றனர். இந்த கடையில் முறைகேடுகள் நடைபெறுவதாக அடிக்கடி குற்றச்சாட்டுகள் எழுந்து வந்துள்ளன.
இதனால் கடையின் விற்பனையாளரும் தொடர்ந்து மாற்றப்பட்டு வந்துள்ளனர். தற்போது ராஜ்மோகன் என்பவர் விற்பனையாளராக உள்ளார். இந்நிலையில் புதன்கிழமை அரிசி வினியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான பொதுமக்கள் கடையில் நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளனர். சிலருக்கு மட்டுமே அரிசி வழங்கிய ராஜ்மோகன், அரிசி தீர்ந்து விட்டதாகவும் மறுபடி அரிசி வந்தால் வினியோகம் செய்யப்படும் என்றும் கூறிவிட்டு கடையை அடைக்க முயன்றுள்ளார்.
பில் மட்டும் வழங்கிவிட்டு அரிசி வழங்காததால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள், கடை விற்பனையாளரையும் கள்ளச்சந்தையில் பொருள்களை பெற்று வந்த தரகர்கள் என்று கருதப்படும் சிலரையும் கடைக்குள் வைத்துப் பூட்டினர். இது குறித்து அறிந்ததும் அன்னதானப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாசர் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அரிசி தொடர்ந்து வழங்க வேண்டும் என்று விற்பனையாளருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து பொதுமக்கள் சமாதானம் அடைந்து கடை விற்பனையாளரையும் தரகர்களையும் விடுவித்தனர். இதையடுத்து அனைவருக்கும் அரிசி வினியோகம் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...