சேலத்தில் பருவ மழை: பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வெள்ள நிவாரண பாதுகாப்பு குழுக்கள்- மாநகராட்சி ஆணையர் தகவல்
சேலம் மாநகரில் வட கிழக்கு பருவ மழையின்போது பொதுமக்களுக்குத்


சேலம் மாநகரில் வட கிழக்கு பருவ மழையின்போது பொதுமக்களுக்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள, மண்டலங்கள்தோறும் உதவி ஆணையர்கள் தலைமையில் வெள்ள நிவாரண பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து ஆணையர் மா.அசோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சேலம் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வட கிழக்கு பருவ மழையின்போது பொதுமக்களுக்கு மழை வெள்ளத்தால் பிரச்னை ஏற்படாமல் பாதுகாக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி, ஒவ்வொரு மண்டலத்திலும் உதவி ஆணையர்கள் தலைமையில் உதவி செயற்பொறியாளர், உதவிப் பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள், தொழில் நுட்பப் பணியாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள், பிட்டர்கள், செயல்திறனற்ற பணியாளர்களை கொண்ட வெள்ள நிவாரண பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்குழுக்கள் மூலம் பருவ மழை முடியும் வரையிலும் தொடர்ந்து நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படும். நிவாரணப் பணிகளுக்குத் தேவையான ஜே.சி.பி. எந்திரம், டிப்பர்கள், டிராக்டர்கள், கழிவு நீர் அகற்றும் வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதற்கான செலவினங்களை மண்டல அளவிலேயே மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்படும் பொதுமக்களை பாதுகாப்பாக தங்கவைப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளி கட்டடங்கள், சமுதாயக் கூடங்கள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றைக் கண்டறிந்து, தயார் நிலையில் வைத்திருக்கவும், மின் விளக்கு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்கவும் இக்குழு நடவடிக்கை மேற்கொள்ளும்.
மாநகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளிலுள்ள ஏரி, குளம் போன்ற நீர் நிலைகள் யாவும் பருவ மழையால் கிடைக்கும் அதிகப்படியான மழை நீரை சேமிக்கும் வகையில் உள்ளன. இருப்பினும் இவற்றில் இருந்து உபரி நீர் வெளியேறும்பட்சத்தில் வாய்க்கால்களை ஏற்படுத்தி குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் செல்லாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்த குழு மேற்கொள்ளும்.
குடிநீரில் கழிவு நீர் கலக்காதவாறும், பாதாள சாக்கடைக் குழிகள், சாலையோர பள்ளங்கள் மூடப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்தும், குடிநீர் குழாய் பதித்தல், தொலைப்பேசி கேபிள்கள் பதித்தல் போன்ற பணிகளை மழைக் காலத்தில் மேற்கொள்ளாமல் நிறுத்தி வைக்கவும் இந்த குழு உரிய ஆலோசனைகள் வழங்கும்.
மாநகராட்சி பகுதிகளிலுள்ள அனைத்து சுகாதார மையங்களிலும் போதிய மருந்துகள் இருப்பு வைத்துக்கொள்ளவும், தாழ்வான பகுதிகளில் குடியிருப்போரை மாற்று இடங்களில் தங்க வைப்பதற்கான பணிகளையும் இந்த குழு மேற்கொள்ளும். மேலும் மழை சேதம், மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த விவரங்களை தினசரி ஆணையருக்கு அறிக்கையாக சமர்ப்பிக்கவும் இந்த குழுக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அசோகன் தெரிவித்துள்ளார்.
24 மணி நேர கட்டுப்பாட்டு அறை
சேலம் மாநகராட்சி பகுதிகளில் வட கிழக்கு பருவமழைக் காலங்களில் பொதுமக்களுக்குத் தேவையான உதவிகள் செய்யும் வகையில் வெள்ள நிவாரண குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் மழை, வெள்ளம் தொடர்பான தகவல்களை தெரிவிக்கும் வகையில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் தொலைப்பேசி எண்கள்:
சேலம் மாநகராட்சி மைய அலுவலகம் - 2212844
சூரமங்கலம் மண்டல அலுவலகம் - 2387514
அஸ்தம்பட்டி மண்டல அலுவலகம் - 2314646
அம்மாபேட்டை மண்டல அலுவலகம் - 2263161
கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகம் - 2461616.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...