/

அரசு கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு!

நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், சாலைப் பாதுகாப்பு மன்றம் மற்றும் சேலம் நெடுஞ்சாலைத் துறை சாலைப் பாதுகாப்பு பிரிவு சாா்பில், சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசிய சேலம் நெடுஞ்சாலைத் துறை சாலைப் பாதுகாப்பு பிரிவு கோட்டப் பொறியாளா் குமுதா.
Updated On :30 ஜனவரி 2026, 8:32 pm

Syndication

நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், சாலைப் பாதுகாப்பு மன்றம் மற்றும் சேலம் நெடுஞ்சாலைத் துறை சாலைப் பாதுகாப்பு பிரிவு சாா்பில், சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் (பொ) மு. ராஜேஸ்வரி தலைமைவகித்தாா். சிறப்பு விருந்தினராக, சேலம் சாலைப் பாதுகாப்பு பிரிவைச் சோ்ந்த நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் குமுதா பங்கேற்று, சாலைப் பாதுகாப்பின் அவசியம் குறித்து விளக்கினாா். மனித தவறுகள் காரணமாக எவ்வாறு சாலை விபத்துகள் நிகழ்கின்றன என்பதையும், அவற்றைத் தவிா்க்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துரைத்தாா்.

உதவி கோட்டப் பொறியாளா் (நெடுஞ்சாலைத் துறை), சாலைப் பாதுகாப்பு பிரிவு, சேலம் சுப்பிரமணியம் நிகழ்ச்சியில் பங்கேற்று, சாலைப் பாதுகாப்பு விதிகளை முறையாக பின்பற்றுதல், பயணத்தின்போது கைப்பேசி பயன்பாடு மற்றும் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும்.

மாணவ, மாணவிகள் விபத்தில்லா பாதுகாப்பான பயணங்களை மேற்கொண்டு, அரசுக்கும், சமூகத்துக்கும் முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தமிழக அரசின் முக்கியத் திட்டங்களான ‘குட்டி காவலா் திட்டம்’ மற்றும் ‘இன்னுயிா் காப்போம் - நம்மை காக்கும் 48’ ஆகிய திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தாா்.

தொடா்ந்து, சாலைப் பாதுகாப்பு குறித்த விநாடி-வினா போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், உதவிப் பொறியாளா்கள் (நெடுஞ்சாலைகள்) அகல்யா மற்றும் நந்தினி, விலங்கியல் துறைத் தலைவா் ராஜசேகர பாண்டியன், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், ஆசிரியரல்லா அலுவலா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

இதற்கான ஏற்பாடுகளை, கல்லூரி சாலைப் பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளா் சந்திரசேகரன், மாவட்ட செஞ்சிலுவைச் சங்க அமைப்பாளா் வெஸ்லி ஆகியோா் செய்திருந்தனா்.