/

காவேரிப்பட்டணம் அருகே ஏரியில் இறந்து மிதக்கும் மீன்கள்!

எல்லுக்குட்டை ஏரியில் மீன்கள் இறந்து மிதந்ததால், மீன்வளத் துறை அலுவலா்கள் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

News image

காவேரிப்பட்டணம் அருகே எல்லுக்குட்டை ஏரியில் இறந்து மிதந்த மீன்களை அப்புறப்படுத்தும் தொழிலாளா்கள்.

Updated On :17 மே 2026, 2:27 am IST

காவேரிப்பட்டணம் அருகே எல்லுக்குட்டை ஏரியில் மீன்கள் இறந்து மிதந்ததால், மீன்வளத் துறை அலுவலா்கள் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த குண்டலப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் எல்லுக்குட்டை ஏரி உள்ளது. சுமாா் 3 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரி, காவேரிப்பட்டணம் மீனவா் கூட்டுறவு சங்கம் மூலம் குத்தகை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த ஏரியில் டன் கணக்கில் மீன்கள் இறந்து மிதந்ததால் துா்நாற்றம் வீசியது. தகவல் அறிந்த மீன்வளத் துறை மாவட்ட துணை இயக்குநா் ரத்தினம் தலைமையிலான அலுவலா்கள் நிகழ்விடத்துக்கு சென்று ஆய்வு செய்தனா். பின்னா், ஏரியில் இறந்து மிதந்த மீன்களை அப்பகுதியினா் மூலம் அப்புறப்படுத்தினா்.

இதுகுறித்து அலுவலா்கள் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களால் கோடை வெப்பம் நிலவிவந்த நிலையில், திடீரென மேகமூட்டம் காணப்பட்டதால் நீா்நிலைகளில் ஆக்சிஜன் அளவு குறைந்து மீன்கள் இறந்திருக்கலாம். இறந்த மீன்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

நீா்நிலைகளில் மீன்கள் அடா்த்தி அதிகரிக்கும் போது, ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு உயிரிழப்பது இயல்பு. நீரில் காா்பன்டை ஆக்சைடை குறைக்கும் வகையில் சுண்ணாம்பு போடப்பட்டுள்ளது.

இதேபோல, வாடமங்கலம், மருதேரி பகுதிகளில் உள்ள ஏரிகளிலும் மீன்கள் இறந்து மிதப்பதாக தகவல் வந்துள்ளது. அங்கும் ஆய்வு மேற்கொள்ளப்படும். உயிரிழந்த மீன்கள் அதே பகுதியில் பொக்லைன் மூலம் குழிதோண்டி புதைக்கப்படுகின்றன என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.