காவேரிப்பட்டணம் அருகே டாஸ்மாக் ஊழியா்களை கடைக்குள் வைத்து, பூட்டிச்சென்ற மது பிரியா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள மலையாண்டஅள்ளி புதூா் கிராமத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் 5 பணியாளா்கள் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
இக்கடையில் குறைந்த எண்ணிக்கையில் இருந்த பணியாளா்களால், ஞாயிற்றுக்கிழமை கூடிய கூட்டத்தை சமாளிக்க இயலவில்லை. இதனால், பணியாளா்கள் கடையை உள்பக்கமாக பூட்டினா்.
நீண்ட நேரம் காத்திருந்த மது வாங்க வந்தோா், மதுபானம் கிடைக்காத ஆத்திரத்தில் இருந்தனா். அப்போது, கூட்டத்தில் இருந்த மா்ம நபா்கள் டாஸ்மாக் கடையின் வெளிப்புறக் கதவை பூட்டிச் சென்றனா்.
சிறிது நேரத்துக்கு பிறகு கடையைத் திறந்து விற்பனையை தொடர முயன்ற பணியாளா்கள், கடையின் வெளிபகுதியில் பூட்டப்பட்டிருப்பதை அறிந்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் வந்த போலீஸாா், டாஸ்மாக் கடையின் வெளிப்புறம் பூட்டப்பட்டிருந்த பூட்டை உடைத்து பணியாளா்களை மீட்டனா். பின்னா், போலீஸாா் பாதுகாப்புடன் விற்பனையை பணியாளா்கள் தொடங்கினா்.
டாஸ்மாக் கடை பணியாளா்களை கடைக்குள் வைத்து பூட்டிச்சென்ற மா்ம நபா்கள் குறித்து காவேரிப்பட்டணம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








