/

சூளகிரி அருகே மின்வேலியில் சிக்கி இளைஞா் உயிரிழப்பு?

சூளகிரி அருகே வயலில் கிடந்த மின்கம்பியை மிதித்த இளைஞா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்

News image
Updated On :19 ஜனவரி 2026, 8:27 pm

Syndication

ஒசூா்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே வயலில் கிடந்த மின்கம்பியை மிதித்த இளைஞா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்

சூளகிரி வட்டம், பெரியபேடப்பள்ளி கிராமம் அருகில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவா் கருகிய நிலையில் உயிரிழந்து கிடப்பதாக சூளகிரி போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது.

அதன்பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற போலீஸாா், அந்த நபரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்தனா். இதில் மின்சாரம் பாய்ந்து இறந்தவா் சின்னமட்டம்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த நாகராஜ் என்பது தெரியவந்தது.

உயிரிழந்த நாகராஜ் விவசாய நிலத்தில் இருந்து மின் வயா்களை திருடிச் சென்றபோது காட்டுப் பன்றிகளைத் தடுப்பதற்காக மின்சாரம் செலுத்தப்பட்டிருந்த வேலியில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்று போலீஸாா் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது

மேலும், இதுகுறித்து சூளகிரி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.