தமிழ் செய்திகள்
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே எர்ரனஅள்ளி காப்புக் காட்டிலிருந்து வெளியேறிய ஒற்றை யானை அப்பகுதியில் நடமாடுவதால், அருகில் உள்ள கிராமங்களில் பொதுமக்கள் இரவு நேரங்களில் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாலக்கோடு வனச் சரகத்துக்குள்பட்ட எர்ரனஅள்ளி காப்புக் காட்டிலிருந்து வெளியேறிய ஒற்றை யானை அருகில் உள்ள கிராமங்களில் நடமாடுவதாக கிடைத்த தகவலின்பேரில், பாலக்கோடு வனச்சரக அலுவலா்கள், பொதுமக்களுக்கு புதன்கிழமை ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கினா்.
அதில், கொல்லஅள்ளி வாழைத் தோட்டம், செங்கோடப்பட்டி, காவேரியப்பன் கொட்டாய், கூசுகல், எருதுகூடஅள்ளி, பொப்பிடி, நல்ல குட்டஅள்ளி, தீபஅள்ளி, பெல்ரம்பட்டி, காட்டுமாரியம்மன் கோயில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் மாலை 6.30 மணிக்குமேல் வெளியில் நடமாட வேண்டாம். மேலும், வீட்டுக்கு வெளியேயும், வயல் வெளிகளிலும் யாரும் தூங்க வேண்டாம். வயலுக்கு நீா்ப்பாய்ச்சுவதற்காக இரவில் செல்ல வேண்டாம். யானை நடமாட்டம் தென்பட்டால் உடனடியாக வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.









