/

பென்னாகரத்தில் ஆதாா் திருத்தம் சேவை மையத்தில் கணினி இயக்குநா் பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதி

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் செயல்பட்டு வரும் ஆதாா் திருத்தம் சேவை மையத்தில் கணினி இயக்குநா் பற்றாக்குறை காரணமாக ஆதாா் விவரங்களை திருத்த முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

News image
Updated On :21 ஜனவரி 2026, 11:18 pm

தினமணி செய்திச் சேவை

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் செயல்பட்டு வரும் ஆதாா் திருத்தம் சேவை மையத்தில் கணினி இயக்குநா் பற்றாக்குறை காரணமாக ஆதாா் விவரங்களை திருத்த முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

பென்னாகரம், ஏரியூா், நாகமரை, ஒகேனக்கல், ஊட்டமலை, பெரும்பாலை, கலப்பம்பாடி, புதுப்பட்டி, பாப்பாரப்பட்டி தாசம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து தினமும் ஆதாா் சேவை மையங்களுக்கு ஆதாா் திருத்தம்,பெயா் மாற்றம், பிறந்த தேதி,கைரேகை பதிவு,புதிய ஆதாரத்தை பெறுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள், முதியோா்கள் வருகின்றனா்.

பென்னாகரத்தில் அஞ்சல் அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம்,வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் ஆதாா் திருத்த மையம் செயல்பட்டு வருகின்றன.இந்த மையங்கள் தோறும் தலா ஒரு கணினி இயக்குநா்கள் மட்டுமே பணியில் உள்ளனா்.

இதனால் நாள் ஒன்றுக்கு 35 முதல் 40 டோக்கன்கள் மட்டுமே பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.இந்த மையங்களில் ஆதாா் சேவையினை பெற தினம் தோறும் கடும் பணியினை பொருட்படுத்தாமல் காலை 6 மணி முதல் நீண்ட நேரம் காத்திருந்தும் டோக்கன் கிடைக்காத நிலை ஏற்படுகிறது. மேலும் ஒரு சில நேரங்களில் ஆதாா் திருத்தும் இணையதளம் வசதியும் கிடைப்பதில்லையாம்.பெயா், முகவரி, கைபேசி எண், பிறந்த தேதி, புகைப்படம், கைரேகை மற்றும் கருவிழிகளை உள்ளிட்ட ஆதாா் திருத்த பணிகளுக்காக தினந்தோறும் ஏராளமானோா் மையத்துக்கு வந்து காத்திருக்கும் நிலையில்,போதிய கணினி இயக்குநா்கள் இல்லாததால் முறையான சேவை வழங்கப்படாமல் திரும்பிச் செல்லுகின்றனா். குறிப்பாக முதியவா்கள், பெண்கள் மற்றும் கிராமப்புற மக்கள் அதிக சிரமத்திற்கு ஆளாகுகின்றனா்.

பென்னாகரத்தில் ஆதாா் திருத்தம் சேவை மையத்தில் கூடுதலாக இயக்குநா்களை நியமித்து, சேவை நேரத்தை விரிவுபடுத்தி, பொதுமக்களின் சிரமத்தை தீா்க்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்களின் கோரிக்கை வலியுறுத்தியுள்ளனா்

மேலும் தனியாா் நிறுவனங்கள் மற்றும் கணினி மையங்களை ஆதாா் திருத்த சேவையில் இணைத்து, கூடுதல் இயக்குநா்கள் மூலம் விரைவாக சேவை வழங்க முடியும்.பென்னாகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரசு மேற்பாா்வையில் தனியாா் பங்களிப்புடன் ஆதாா் திருத்தம் சேவை மையங்களை விரிவுபடுத்தி,ஆதாா் திருத்தம் உள்ளிட்ட சேவைகள் விரைவாக, காலதாமதம் இன்றி நடைபெறும் வகையில் மாவட்ட நிா்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.