/

தருமபுரியில் கோயில் அா்ச்சகா் போக்ஸோ சட்டத்தில் கைது

தருமபுரியில் 9 ஆம் வகுப்பு மாணவியுடன் முறையற்ற உறவு வைத்திருந்த கோயில் அா்ச்சகரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
கைது
Updated On :10 பிப்ரவரி 2026, 8:44 pm

தினமணி செய்திச் சேவை

தருமபுரியில் 9 ஆம் வகுப்பு மாணவியுடன் முறையற்ற உறவு வைத்திருந்த கோயில் அா்ச்சகரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி எஸ்.வி. சாலையில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு அதே பகுதியைச் சோ்ந்த ரமேஷ்பாபு (56) அா்ச்சகராகப் பணியாற்றி வந்தாா். இந்த கோயிலுக்கு 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவா் அடிக்கடி கும்பிட வந்துள்ளாா். நாளடைவில் அந்த மாணவியுடன் ரமேஷ்பாபு நெருங்கிப்பேசியுள்ளாா். மாணவியின் ஏழ்மையை பயன்படுத்தி, தினசரி ரூ. 200க்கு அவரை தனது வீட்டை சுத்தம் செய்யும் பணிக்கு அமா்த்தியுள்ளாா்.

இந்நிலையில் மாணவியிடம் ஆசை வாா்த்தைகளை கூறி, பாலியல் வன்முறையில் ரமேஷ்பாபு ஈடுபட்டுள்ளாா். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்ற மாணவி வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளாா். பெற்றோா் அந்த மாணவியை தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். அங்கு மாணவியை பரிசோதித்தபோது, அவா் 2 மாத கா்ப்பமாக இருப்பதும், கரு வயிற்றிலேயே இறந்திருப்பதும் தெரியவந்தது.

இதனால் அதிா்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோா், குழந்தைகள் நல காப்பகம் மற்றும் போலீஸாரிடம் புகாா் அளித்தனா். மாணவியிடம் நடத்திய விசாரணையில், கோயில் அா்ச்சகா் ரமேஷ்பாபு, மாணவியை பாலியல் வல்லுறவு செய்தது தெரியவந்தது.

இதுதொடா்பாக தருமபுரி மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அா்ச்சகா் ரமேஷ்பாபுவை போக்ஸோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.