/

மதிப்பிழக்கும் தங்கம் பிரித்தெடுக்கும் தொழில்!

நாமக்கல், ஜூலை 25: கழிவு மணல், சாம்பல்களிலிருந்து தங்கம், வெள்ளியைப் பிரித்தெடுக்கும் தொழிலில் வருவாயைக் காட்டிலும் நஷ்டமே அதிகரித்து வருகிறது. எனினும், காலம்காலமாக செய்யும் தொழிலை விட்டுச் செல்ல வழிய

News image
Updated On :2 ஜனவரி 2024, 6:15 pm

என். தமிழ்ச்செல்வன்

நாமக்கல், ஜூலை 25: கழிவு மணல், சாம்பல்களிலிருந்து தங்கம், வெள்ளியைப் பிரித்தெடுக்கும் தொழிலில் வருவாயைக் காட்டிலும் நஷ்டமே அதிகரித்து வருகிறது. எனினும், காலம்காலமாக செய்யும் தொழிலை விட்டுச் செல்ல வழியின்றி சேந்தமங்கலம் பகுதியில் அந்தத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் மாற்றுத் தொழில் வாய்ப்பை எதிர்நோக்கியுள்ளனர்.

 தங்கம், வெள்ளி நகைகள் செய்யும் போது சேதாரமாகும் கண்ணுக்குத் தெரியாத துகள்கள் உபயோகிக்கும் மணல், சாம்பல்களில் படிந்துவிடுகின்றன. அத்தகைய தங்கம், வெள்ளித் துகள்கள் கலந்த மணல், சாம்பல் மற்றும் குப்பைகளை குறிப்பிட்ட விலைக்கு எடுத்து வந்து, அவற்றை பல்வேறு நிலைகளில் பக்குவப்படுத்தி அதிலிருந்து தங்கம், வெள்ளியைப் பிரித்தெடுக்கும் தொழில் நாமக்கல்லை அடுத்துள்ள சேந்தமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதியில் 12 பட்டறைகளில் நடைபெற்று வருகிறது. இவற்றில் பெருமளவில் பெண்கள் உள்பட சுமார் 2000 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.

 இந்தப் பட்டறைகளுக்கு தமிழகம் மட்டுமன்றி கேரளம், ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்தும் கழிவு மணல், சாம்பல் கொண்டு வரப்படுகின்றன.

 சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தக் கழிவு மணல், சாம்பல் தாராளமாகக் கிடைத்து வந்தது. தற்போது தங்கம் விலையேற்றத்தாலும், நகைகளை பெருமளவில் இயந்திரங்கள் மூலம் செய்யத் தொடங்கிவிட்டதாலும் தங்கம், வெள்ளித் துகள்கள் கலந்த கழிவு மணல், சாம்பல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 இதனால், பல்வேறு போட்டிகளுக்கு மத்தியில் பிற மாநிலங்களிலிருந்து அதிக விலை கொடுத்து எடுத்து வரும் கழிவு மணல், சாம்பலில் செலவுக்கு கட்டுப்படியாகக் கூடிய அளவில்கூட தங்கம், வெள்ளி கிடைப்பதில்லை.

 இதனால், அண்மைக்காலமாக இந்தத் தொழிலில் வருவாயைக் காட்டிலும் பெருமளவில் நஷ்டமே ஏற்படுகிறது என்கிறார் சேந்தமங்கலத்தில் பட்டறை நடத்தி வரும் சி.நடராஜன். அவர் மேலும் கூறியது:

 முன்பெல்லாம் நகைகளை கைகளால் செய்யும் போது பெருமளவில் சேதாரங்கள் வெளியேறும். இதனால், கழிவு மணல், சாம்பலில் அதிகளவில் தங்கம், வெள்ளித் துகள்கள் கிடைக்கும். ஆனால், தற்போது இயந்திரங்களைப் பயன்படுத்தி நகைகள் செய்யப்படுவதால் வெளியேறும் சேதாரங்கள் குறைந்துள்ளன. இதனால், கழிவுகளிலிருந்து தங்கம், வெள்ளி கிடைப்பதும் அரிதாகியுள்ளதால், இந்தத் தொழிலில் வருவாய் குறைந்து நஷ்டம் அதிகரித்துள்ளது.

 இதனால், பலத்த நஷ்டத்துக்கு உள்ளான பலரும் சில ஆண்டுகளில் இந்தத் தொழிலைவிட்டு விலகி வேறு வேலைக்குச் சென்றுவிட்டனர். எனினும், தற்போது பணியாற்றும் தொழிலாளர்களின் நிலை, வேறு வேலைக்குச் செல்ல முடியாத சூழல் காரணமாக தொடர்ந்து இதே தொழிலைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்தப் பட்டறைகள் இயக்கப்படுகின்றன என்றார் நடராஜன்.

 இதுகுறித்து ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சி.சீனிவாசன் கூறியது:

 பெரும்பாலும் அதிர்ஷ்டத்தை நம்பிய தொழிலாகவே பார்க்கப்படும் இந்தப் பட்டறைகளுக்கு, அண்மைக்காலமாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் நெருக்கடிகளும் அதிகரித்துள்ளன.

 எனினும், காலம்காலமாக செய்யும் தொழிலைவிட்டுச் செல்ல வழியின்றி இந்தத் தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர். எனவே, இந்த தங்கம் தேடும் பட்டறைத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மாற்றுத் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.