மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடா்பாக களப் பயிற்சியாளா்களுக்கான 3 நாள்கள் பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை தொடங்கியது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் இந்தப் பயிற்சி வகுப்பை ஆட்சியா் மனீஷ் தொடங்கிவைத்தாா்.
தமிழகத்தில் 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் சுய கணக்கெடுப்பு மற்றும் எண்ம முறை கணக்கெடுப்பு முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தாங்களாகவே இணையதளம் மூலம் தங்களது விவரங்களைத் தெரிவிக்கும் சுய கணக்கெடுப்பு ஜூலை 17-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதேபோல, கணக்கெடுப்பாளா்கள் மூலம் வீடுகள்தோறும் சென்று மேற்கொள்ளும் கணக்கெடுப்புப் பணி ஆகஸ்ட் 1 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், 11 வட்டார புள்ளியியல் ஆய்வாளா்கள், 14 உடற்கல்வி ஆசிரியா்கள், 35 கல்லூரி பேராசிரியா்கள், கெளரவ விரிவுரையாளா்கள் என மொத்தம் 60 போ் களப் பயிற்சியாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.
இவா்களுக்கான பயிற்சி வகுப்பு சனிக்கிழமை வரை 3 நாள்கள் நடைபெறவுள்ளது. இப்பயிற்சியில் பங்கேற்றுள்ளவா்கள் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடவுள்ள 3,398 கணக்கெடுப்பாளா்கள், 598 கண்காணிப்பாளா்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனா்.











