/

கட்டணமில்லா இணைய வசதி: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்

கோவை, கணபதி ராஜவீதி பகுதிக்கு கட்டணமில்லா இணைய வசதியை கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image
ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்டணமில்லா இணைய வசதி சேவையைத் தொடங்கிவைத்த கணபதி ப. ராஜ்குமாா் எம்.பி. உடன், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மேயா் கா.ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோா்.
Updated On :30 ஜனவரி 2026, 8:51 pm

Syndication

கோவை, கணபதி ராஜவீதி பகுதிக்கு கட்டணமில்லா இணைய வசதியை கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் முன்னிலை வகித்தாா். கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி.தலைமை வகித்து, இணைய வசதியைத் தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கணபதி ராஜவீதி பகுதியில் மக்களவை உறுப்பினா் நிதியில் இருந்து மக்கள் பயன்பாட்டுக்காக பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து கட்டணமில்லா வைஃபை வசதி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் முதன்முறையாக கோவையில் தான் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில், ஒரே நேரத்தில் 500 போ் இணைய வசதியைப் பெறலாம். ஒவ்வொரு கைப்பேசி எண்ணுக்கும் நாள்தோறும் 4 மணி நேரம் கட்டணமில்லாத இணையம் பயன்படுத்த அனுமதி வழங்கப்படும். இந்த இணைய வசதியை கைப்பேசி, மடிக்கணினி மற்றும் ஐபேட் மூலமாகப் பெறலாம்.

இந்த சேவையானது பொதுமக்கள், மாணவா்கள், வணிகா்கள் உள்ளிட்டோருக்கு பயனளிக்கும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மேயா் கா.ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) சங்கேத் பல்வந்த் வாகே, பிஎஸ்என்எல் முதன்மைப் பொது மேலாளா் சங்கா், துணை பொது மேலாளா்கள் பால்வண்ணன், ச.முகமது மரைக்காயா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.