/

விவசாயிகளுக்கு வழிகாட்டும் வேளாண் பல்கலை. வானொலி!

கோவை, பிப். 14: கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால்,  விவசாயிகளுக்கான சமுதாய வானொலி சேவை நடத்தப்படுகிறது. இது கோவை பகுதி விவசாயிகளுக்கு உதவிகரமாக உள்ளது. ஒரு காலத்தில் உரிமக் கட்டணம் செலு

News image
Updated On :28 டிசம்பர் 2023, 4:30 pm

ஆர். ஆதித்தன்

கோவை, பிப். 14: கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால்,  விவசாயிகளுக்கான சமுதாய வானொலி சேவை நடத்தப்படுகிறது. இது கோவை பகுதி விவசாயிகளுக்கு உதவிகரமாக உள்ளது.

ஒரு காலத்தில் உரிமக் கட்டணம் செலுத்தி மட்டுமே வானொலி சேவையைக் கேட்க முடிந்தது. இன்றைய நிலையில் அதீத தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக செல்போனில் கூட சினிமா பாடல் தொடங்கி அரசியல், விளையாட்டு வரையில் பல்வேறு நிகழ்ச்சிகள் எஃப்.எம். சேனல்களில் இலவசமாக ரசித்துக் கேட்க முடிகிறது.

  எஃப்.எம். சேனல்களில் நாட்டு நடப்புகள், சினிமா, அரசியல், கல்வி என பல

துறை சார்ந்த நிகழ்ச்சிகள் இடம்பெற்றாலும், விவசாயம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை. அந்த வகையில், விவசாயிகளுக்கென சமுதாய வானொலி சேவையை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழம் ஒலிபரப்பி வருகிறது.

மத்திய அரசின் ரூ. 20 லட்ச நிதியுதவியுடன் கடந்த 2010 டிசம்பரில் தொடங்கப்பட்டு, ஜனவரி முதல் வாரத்தில் இருந்து விவசாயிகள் தொடர்பான நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன.

இந்த வானொலி சேவைக்கு "வேளாண் பல்கலைக்கழக விவசாயி எஃப்.எம்.' என பெயரிடப்பட்டுள்ளது. 107.4 என்ற அலைவரிசையில் காலை 10.30 மணி முதல் பகல் 1 மணி வரை நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன.

வானொலி நேரத்தை மேலும் நீட்டிப்பதுடன் மாணவர்கள், வர்த்தகர்கள், வீட்டில் உள்ள பெண்கள், ஏற்றுமதியாளர்கள் தொடர்பான நிகழ்ச்சிகளும் விரைவில் ஒலிபரப்பப்பட உள்ளன.

சுமார் 18 கிமீ சுற்றளவில் இந்த வானொலி சேவை வழங்கப்பட்டு வருகிறது. சுமார் 22 கிராமங்களில் விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சம் பேர் இந்தச் சேவையைக் கேட்க முடியும்.  வானிலை முன்னறிவிப்பு, மாநில அளவிலான காய்கறி விலை நிலவரம், மீன் வளர்ப்பு, கல்வி, பொழுதுபோக்கு உள்ளிட்ட பயனுள்ள தகவல்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இது குறித்து, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் விரிவாக்க கல்வி இயக்குநர் கலைச்செல்வன் கூறியது:

மத்திய அரசு நிதியுதவியுடன் தொடங்கப்பட்டுள்ள இந்த சமுதாய வானொலியில் வேளாண்மைக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. மாணவர்கள், ஏற்றுமதியாளர்கள், வீட்டுப் பெண்கள் உள்ளிட்ட பலருக்கும் பயனுள்ள தகவல்களும், வீட்டில்

இருந்தபடியே கைத்தொழில்கள் செய்வது குறித்தும் துறை சார்ந்த வல்லுநர்கள் மூலம் ஒலிபரப்பப்படும்.

விவசாயிகளே தங்களின் அனுபவங்களை இந்த சமுதாய வானொலி மூலம் பகிர்ந்து கொள்ளலாம். வேளாண் துறை வல்லுநர்களிடம் விவசாயம் தொடர்பான தகவல்கள் பதிவு செய்யப்பட்டு, ஒலிபரப்பப்படும். இதன்மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வேளாண் நிலவரம் குறித்து, கோவையில் உள்ள ஒரு விவசாயி கேட்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.

கல்வி நிகழ்ச்சிகள்: பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் கல்விக்கான சமுதாய வானொலி ஒலிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சிகளை, வேளாண் சமுதாய வானொலியில் இணைக்கத் திட்டமிட்டுள்ளோம்.

இதன்மூலம் விவசாயிகள் மட்டுமல்லாமல் மாணவர்களும் கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளை கேட்க முடியும். இந்த வானொலி சேவை படிப்படியாக 12 மணி நேரமாக நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.