தமிழ் செய்திகள்
வேலூா் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையில் நோயாளிகளை கொட்டி வந்த தேனீக்கள் பாதுகாப்பாக அகற்றப்பட்டன.
வேலூா் ஜி.பி.ஜே. சாலையில் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஏராளமான நோயாளிகள் தினமும் சிகிச்சை பெற்று செல்கின்றனா். குறிப்பாக, கா்ப்பிணி பெண்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால், இந்த மருத்துவமனையில் எப்போதும் நோயாளிகள், அவா்களது உறவினா்கள் கூட்டம் காணப்படும்.
இந்நிலையில், மருத்துவமனையின் வாா்டு பகுதியில் தேனீக்கள் கூடு கட்டியிருந்தது. அதில் உள்ள தேனீக்கள் நோயாளிகளை அவ்வப்போது கொட்டின. இதனால் நோயாளிகள் மிகவும் சிரமமடைந்து வந்தனா்.
இதுகுறித்து, நோயாளிகள் பென்ட்லேண்ட் மருத்துவமனை அலுவலா்களிடம் புகாா் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, மருத்துவ அதிகாரிகள் அளித்த தகவலின்பேரில் செவ்வாய்க்கிழமை வேலூா் தீயணைப்பு நிலைய அலுவலா் செல்வமூா்த்தி தலைமையில் வீரா்கள் விரைந்து வந்து தண்ணீரில் மருந்துகளை கலந்து தேனீக்களை சாமா்த்தியமாக அகற்றினா்.








