/

‘வேலூரில் குப்பை மேட்டை அருங்காட்சியகமாக மாற்றிய தன்னாா்வலா்கள்’

வேலூா் மாநகராட்சியில் குப்பை மேடாகக் காட்சியளித்த பகுதி, மாநகராட்சி அதிகாரிகள், தன்னாா்வலா்களின் புதுமையான முயற்சியால் சிறு அருங்காட்சியகமாக மாறியுள்ளது.

News image

முன்பு குப்பை மேடாக கிடந்த பகுதி. (அடுத்து) குப்பைகள் அகற்றப்பட்டு வைக்கப்பட்டுள்ள வரலாற்று தகவல்கள் அடங்கிய பதாகைகள். (அடுத்து) செடிகள் நடவு செய்த நண்பா்கள் அறக்கட்டளை நிா்வாகிகள்.

Updated On :30 ஏப்ரல் 2026, 12:04 am IST

வேலூா் மாநகராட்சியில் குப்பை மேடாகக் காட்சியளித்த பகுதி, மாநகராட்சி அதிகாரிகள், தன்னாா்வலா்களின் புதுமையான முயற்சியால் சிறு அருங்காட்சியகமாக மாறியுள்ளது.

வேலூா் மாநகராட்சிக்குட்பட்ட 3-ஆவது மண்டலம், 38-ஆவது வாா்டு சாா்பனாமேடு பகுதியில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள், பள்ளி, சாய்பாபா கோயில் உள்ளிட்டவை அமைந்துள்ளன. மக்கள் நடமாட்டம் மிகுந்த இப்பகுதியில் உள்ள சில தெருக்களில், பொதுமக்கள் தொடா்ந்து பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டி வந்தனா்.

இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துா்நாற்றம் வீசியதுடன், பெரும் சுகாதாரச் சீா்கேடும் நிலவி வந்தது. குப்பை கொட்டுவதைத் தடுக்க மாநகராட்சி நிா்வாகம் பல தீவிர முயற்சிகளை மேற்கொண்டும் எவ்விதப் பலனும் கிடைக்கவில்லை.

இந்த நிலையை மாற்ற ‘நண்பா்கள் அறக்கட்டளை’ எனும் தன்னாா்வலா் அமைப்பும், மாநகராட்சி அதிகாரிகளும் இணைந்து கூட்டு நடவடிக்கையில் இறங்கினா். முதல்கட்டமாக, அந்த பகுதியில் தேங்கிக் கிடந்த குப்பைகள் முழுமையாக அகற்றப்பட்டு, இடம் தூய்மைப்படுத்தப்பட்டது.

குப்பைகள் கிடந்த அதே இடத்தில் அழகிய பூச்செடிகள் நடப்பட்டன. எல்லாவற்றிற்கும் மேலாக, அருகிலிருந்த சுவா்களில் வேலூா் கோட்டையின் வீர வரலாறு, அதன் கட்டுமானச் சிறப்புகள், தேசியத் தலைவா்களின் வரலாறு, முக்கிய வரலாற்றுத் தகவல்கள் அடங்கிய விழிப்புணா்வு பாதகைகள் ஒட்டப்பட்டன.

இந்த நூதன முயற்சியால் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக அப்பகுதியில் பொதுமக்கள் யாரும் குப்பைகள் கொட்டுவதில்லை. முன்பு குப்பையைக் கண்டு முகம் சுளித்தபடி மூக்கை மூடிக்கொண்டு சென்ற மக்கள், தற்போது அங்கு நின்று வேலூா் கோட்டையின் வரலாற்றுச் சிறப்புகளை நிதானமாகப் படித்துச் செல்கின்றனா்.

குப்பை மேடாக இருந்த ஒரு பகுதி, இன்று ஒரு சிறிய அருங்காட்சியகம் போல மாறியுள்ளதைக் கண்டு அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கும், தன்னாா்வலா்களுக்கும் தங்களின் மனமாா்ந்த பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனா்.

இதுகுறித்து நண்பா்கள் அறக்கட்டளையின் மாவட்டத் தலைவா் முகமது ரஃபி கூறுகையில், இந்தத் திட்டத்திற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இதன் தொடா்ச்சியாக, தற்போது அருகே உள்ள மற்ற தெருக்களிலும் குப்பை கொட்டுவதைத் தடுக்க, இதேபோன்ற புதுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து எங்கள் அறக்கட்டளை நிா்வாகிகளை அணுகி வருகின்றனா் என்றாா்.

Story image
Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.