ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
//

பச்சைத் தமிழகத்தின் பானை நிரம்புமா?

கூடங்குளத்தில் தொடங்கி, ஆம் ஆத்மியிலிருந்து விலகி, பச்சைத் தமிழகமாக புதிய பரிமாணம் எடுத்துள்ள சுப. உதயகுமாரனின் குரல் தமிழக சட்டப் பேரவையில் ஒலிக்க வேண்டும் என்ற பேராவல் கூடங்குளம் எதிர்ப்பாளர்களிடம் மேலோங்கி நிற்கிறது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:12 pm

ஆர். முருகன்

கூடங்குளத்தில் தொடங்கி, ஆம் ஆத்மியிலிருந்து விலகி, பச்சைத் தமிழகமாக புதிய பரிமாணம் எடுத்துள்ள சுப. உதயகுமாரனின் குரல் தமிழக சட்டப் பேரவையில் ஒலிக்க வேண்டும் என்ற பேராவல் கூடங்குளம் எதிர்ப்பாளர்களிடம் மேலோங்கி நிற்கிறது.

அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தை கூடங்குளத்தில் முன்னெடுத்து, இயக்க ஒருங்கிணைப்பாளராக உருவான சுப. உதயகுமாரன், அவருடன் ஒருங்கிணைந்து பணியாற்றிய மை.பா. ஜேசுராஜ், ம. புஷ்பராயன் ஆகியோர் கடந்த 2014 பிப்ரவரி 12ஆம் தேதி ஆம் ஆத்மி கட்சியில் இணைவது என்றும், மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது எனவும் முடிவு செய்தனர்.

இதன்படி, இடிந்தகரையில் உள்ள கூடங்குளம் போராட்டக் களத்தில் இருந்து 2014 மார்ச் 29ஆம் தேதி வெளியேறி தேர்தல் களத்துக்கு வந்தனர். மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரியில் சுப. உதயகுமாரன், திருநெல்வேலியில் மை.பா. ஜேசுராஜ், தூத்துக்குடியில் புஷ்பராயன் ஆகியோர் துடைப்பம் சின்னத்தில் போட்டியிட்டனர். புஷ்பராயன் மட்டும் 26,476 வாக்குகள் பெற்றார். உதயகுமாரனுக்கு 15,314, ஜேசுராஜுக்கு 18,353 வாக்குகள் கிடைத்தன.

தேர்தலுக்குப் பிறகு இவர்கள் ஆம் ஆத்மியிலிருந்து விலகினர். தமிழக மக்களின் உணர்வுகள், தமிழக அரசியல் நிலைப்பாடு, அணு உலைக்கு எதிரான கொள்கை தொடர்பாக கட்சித் தலைமை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் ஹிந்தி பேசும் 9 பேருக்கு மட்டுமே பிரதிநிதித்துவம் அளிப்பதாகவும் கூறி, ஆம் ஆத்மியிலிருந்து விலகினார் உதயகுமாரன்.

மேலும், அரசியல்வாதி ஆக வேண்டும் என்பதோ, தலைவராக வேண்டும் என்பதோ எனது நோக்கம் இல்லை எனவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அனைத்து சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும் ஒருங்கிணைக்கும் வகையில், பச்சைத் தமிழகம் என்ற புதிய அமைப்பு தொடங்குவதாக 2015 பிப்ரவரி மாதம் திருச்சியில் அறிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக, 2016இல் இந்த இயக்கத்தை கட்சியாக மாற்றினார். இப்போது, ராதாபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்து தேர்தல் களத்தில் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார்.

இவருக்கு பானை சின்னத்தை அளித்துள்ளது தேர்தல் ஆணையம். தேர்தல் பிரசாரத்தில் கிடைத்த இடத்தில் தூங்குவது, குடிசையில் தங்குவது, தெருவோரக் கடையில் மக்களோடு தேநீர் அருந்துவது, கடற்கரை மணலில் மீனவர்களுடன் வலம் வருவது, தேவாலயங்களில் கூட்டத்தில் பங்கெடுப்பது என தொகுதி முழுவதும் சுற்றி வருகிறார். மக்கள் மத்தியிலும் வரவேற்பு உள்ளது.

ஆனால், இந்த வரவேற்பு வாக்குகளாக மாறுமா, பச்சைத் தமிழகத்தின் பானை நிரம்புமா என்ற கேள்விக்கு மே 19ஆம் தேதி விடை கிடைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.