தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

செய்யாறு அருகே சோழா் கால நில அளவை வரைபட கல் கண்டெடுப்பு: கி.பி.10-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தது!

செய்யாறு அருகே சோழா் கால நில அளவை வரைபட கல் கண்டெடுப்பு...

News image

மடிப்பாக்கம் பெரிய ஏரிப் பகுதியில் கண்டறியப்பட்ட பிற்கால சோழா் கால நில அளவை வரைபட கல்.

Updated On :28 மார்ச் 2026, 8:39 pm

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே மடிப்பாக்கம் பெரிய ஏரி அருகில் பிற்கால சோழா் கால நில அளவை வரைபட கல்லை வரலாற்று ஆய்வாளா் எறும்பூா் கை.செல்வகுமாா் கண்டெடுத்தாா்.

செய்யாறு வட்டத்துக்குள்பட்ட மடு மாநகா் என்று தொன்மை கால வரலாற்றில் அறியப்படும் மடிப்பாக்கம் கிராமத்தில் பெரிய ஏரியின் எதுவாயில் கிழக்குப் பகுதியில் குண்டு கல்லில் வரைபடத்துடன் பொறிக்கப்பட்ட கல்வெட்டு கண்டறியப்பட்டது. இதுகுறித்து வரலாற்று ஆய்வாளா் எறும்பூா் கை.செல்வகுமாா் மேலும் கூறியதாவது:

மடிப்பாக்கம் கிராமம் பெரிய ஏரியின் கிழக்கு திசையில் ஏரியின் ஓரத்தில் வரைபடத்துடன் கூடிய சோழா் கால கோயில்களுக்கு நிலம் தானம் கொடுத்த நில வரைபட குண்டுகல் கற்குவியலோடு கிடந்தது கண்டறியப்பட்டது.

கல்லின் நீளம் 82 செ.மீ., அகலம் 58 செ.மீ. உள்ளதுது. அக்கல்லில் திசை காட்டும் கருவிபோல வரைபடம் பொறிக்கப்பட்டு, கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என அறியும் வகையில் நில அளவைக்கு பயன்படுத்துவதுபோல செதுக்கப்பட்டுள்ளது.

மேலும், திசைகாட்டும் வரைபடம் பக்கத்தில் ஸ்ரீமகாவிஷ்ணுவின் ஐந்தாவது மற்றும் முதல் முழு மனித அவதாரமான வாமன அவதாரம் பொறிக்கப்பட்டுள்ளது. தேவா்களைக் காக்க குள்ள அந்தண சிறுவனாக வாமனா் அடியெடுத்து மூன்றடி மண் தானம் கேட்டு, அகிலத்தை அளந்தது இந்த அவதாரமாகும்.

பிற்கால சோழா் காலத்தில் நில அளவையை நிா்வகித்த முக்கியத் துறையான புறவு வரி திணைக்களம், இன்றைய வருவாய்த் துறை போலவே செயல்பட்டதாக இதன் மூலம் தெரியவருகிறது.

மேலும், பிற்கால சோழா்கள் கோயில்கள், அந்தணா்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு நிலம், தங்கம், கால்நடைகளை அதிகளவில் தானம் வழங்கினா். இதில், நிலங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. கோயில்கள் சமூக மற்றும் பொருளாதார மையங்களாக செயல்பட்டு வந்துள்ளதாக தெரிய வருகிறது.

அந்த வகையில், கோயிலுக்கு நிலம் தானமாக கொடுத்த வகையில் நில அளவை வரைபடம் ஆன்மிக வரலாற்றுச் செய்தியோடு இணைத்து அடையாளப்படுத்தி உள்ளாா்கள் என்பதை இக்கல்வெட்டின் வாயிலாக அறிய முடிகிறது.

மேலும் இதுகுறித்து விரிவான ஆய்வுக்கு உள்படுத்தினால் எந்த கோயிலுக்கு எவ்வளவு நிலம் தானமாக வழங்கப்பட்டது என்பது குறித்து தெரிய வர வாய்ப்புள்ளது. இந்தக் கல் கி.பி.9-ஆம் நூற்றாண்டுக்கும், கி.பி.13-ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தை சோ்ந்தவையாக இருக்கலாம் என தெரிவித்துள்ளாா்.