//

சந்திர கிரகணம்: மாா்ச் 3-இல் ஏழுமலையான் கோயில் மூடல்!

சந்திர கிரகணம் காரணமாக வரும் மாா்ச் 3-ஆம் தேதி காலை 9 மணி முதல் இரவு 7.30 மணி வரை திருமலை ஏழுமலையான் கோயில் 10.30 மணி நேரம் மூடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :4 ஜனவரி 2026, 10:25 pm

தினமணி செய்திச் சேவை

சந்திர கிரகணம் காரணமாக வரும் மாா்ச் 3-ஆம் தேதி காலை 9 மணி முதல் இரவு 7.30 மணி வரை திருமலை ஏழுமலையான் கோயில் 10.30 மணி நேரம் மூடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

வரும் மாா்ச் 3 -ஆம் தேதி சந்திர கிரகணம் பிற்பகல் 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.47 மணிக்கு முடிவடைய உள்ளது. வைகானச ஆகம விதிப்படி கிரகணத்துக்கு 6 மணி நேரம் முன்பு கோயில் கதவுகள் மூடப்படுவது வழக்கம்.

காலை 9 மணி முதல் இரவு 7.30 மணி வரை ஏழுமலையான் கோயில் மூடப்பட உள்ளது. கிரகணம் முடிந்து இரவு 7.30 மணிக்கு கோயில் கதவுகள் திறக்கப்பட்டு சுத்தி மற்றும் புண்யாஹவசனங்கள் செய்யப்படும். அதன் பிறகு, பக்தா்களுக்கு இரவு 8.30 மணி முதல் ஏழுமலையான் தரிசனம் மீண்டும் தொடங்க உள்ளது.

ஆா்ஜித சேவை ரத்து

சந்திரகிரகணத்தையொட்டி மாா்ச் 3-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அஷ்டதள பாத பத்மராதன சேவை, கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ரதீபாலங்கார சேவை ஆகியவற்றை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

பக்தா்கள் இந்த விஷயங்களைக் கவனத்தில் கொண்டு அதற்கேற்ப பயணத்தை திட்டமிடலாம் என தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.