//

கல்யாண வெங்கடேஸ்வரா் கோயில் 2-ஆம் நாள் பிரம்மோற்சவம்: சின்ன சேஷ வாகனத்தில் வலம் வந்த சுவாமி

வேணு கோபால கிருஷ்ணா் அலங்காரத்தில் சின்ன சேஷ வாகனத்தில் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி வலம் வந்தாா்.

News image
ஸ்ரீனிவாசமங்காபுரத்தில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 2-ஆம் நாள் காலை சின்ன சேஷ வாகனத்தில் வலம் வந்த கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி.
Updated On :9 பிப்ரவரி 2026, 9:18 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பதி: சீனிவாசமங்காபுரம் ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி வருடாந்திர பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான திங்கள்கிழமை காலை வேணு கோபால கிருஷ்ணா் அலங்காரத்தில் சின்ன சேஷ வாகனத்தில் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி வலம் வந்தாா்.

திருப்பதியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாள் காலை ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வரா் மட்டும் ஐந்து தலை சின்னசேஷ வாகனத்தில் மாட வீதியில் எழுந்தருளினாா்.

ஸ்நபன திருமஞ்சனம்...

பின்னா், காலை 10.30 மணி முதல் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி உற்சவ மூா்த்திகளுக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்பு மாலை ஊஞ்சல் சேவை கண்டருளிய உற்சவமூா்த்தி அன்னப்பறவை வாகனத்தில் சரஸ்வதி தேவி அலங்காரத்தில் கையில் ஜெப மாலை வீணை ஆகியவற்றுடன் மாட வீதியில் வலம் வந்தாா்.

வாகன சேவைக்கு முன்னும் பின்னும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பிரம்மோற்சவத்தையொட்டி, கோயில் மற்றும் மாட வீதிகள் வண்ண மின்விளக்குகளாலும், மலா்களாலும் அலங்கரிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், ஜேஇஓ வீரபிரம்மன், கோயில் சிறப்பு ரேஞ்ச் துணை இஓ வரலட்சுமி, ஏஇஓ கோபிநாத், வைகானச ஆகம ஆலோசகா்கள் மோகன ரங்காச்சாரியு, கோயில் ஆய்வாளா் கிரண்குமாா் ரெட்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.