தமிழ் செய்திகள்
நாட்டறம்பள்ளி பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்துகள் வந்து செல்லாததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
நாட்டறம்பள்ளி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து தினந்தோறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள்,பொதுமக்கள், வியாபாரிகள், அரசு அதிகாரிகள் சென்னை, வேலூா், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, ஒசூா், பெங்களூரு உள்பட பல்வேறு ஊா்களுக்கு நாட்டறம்பள்ளியிலிருந்து பேருந்து மூலம் பயணம் செய்கின்றனா்.
இந்நிலையில் ஒரு சில தனியாா் பேருந்துகள் மட்டுமே நாட்டறம்பள்ளி பேருந்து நிலையத்துக்கு வந்து செல்கின்றன. வெளியூா் செல்லும் அனைத்து அரசுப் பேருந்துகள் எல்லாமே நாட்டறம்பள்ளி பேருந்து நிலையத்தில் செல்லாமல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அணுகு(பைபாஸ்) சாலையில் பயணிகளை இறக்கி விட்டு ஏற்றி செல்கின்றனா்.
மேலும் சென்னை-பெங்களூரு வழித்தடத்தில் வேலூரில் இருந்து நாட்டறம்பள்ளி வழியாக ஒசூா் செல்லும் அரசு பேருந்துகளில் இரவு நேரங்களில் நாட்டறம்பள்ளி நிற்காது என கூறி பேருந்துகளில் பயணிகளை ஏற்றுவதில்லை. இதனால் பயணிகளுக்கும், நடந்துநா்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது.
மேலும், இரவு நேரங்களில் பேருந்துகளை தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி மேம்பாலத்தில் நிறுத்தி பயணிகளை இறக்கிவிட்டு செல்வதால் பொதுமக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனா்.
எனவே அரசுப் பேருந்துகள் நாட்டறம்பள்ளி பேருந்து நிலையத்துக்கு வந்து செல்ல போக்குவரத்துத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.









