திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள ஆம்பூா் நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வெளிவட்ட சாலை (அவுட்டா் ரிங் ரோடு) அமைக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை பொதுமக்களிடையே வலுத்துள்ளது.
ஆம்பூா் நகரம் சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. தோல் பதனிடும் மற்றும் தோல் காலணி ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலைகள் நிறைந்த நகரமாகும். ஆம்பூா் நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் அமைந்துள்ள தோல் பதனிடும் மற்றும் காலணி தயாரிப்பு தொழிற்சாலைகளில் லட்சக்கணக்கான தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா்.
அதிகரித்த வாகனப் போக்குவரத்து... ஆம்பூா் நகரிலிருந்து கிராமப் பகுதி தொழிற்சாலைகளுக்கும், கிராம பகுதியிலிருந்து ஆம்பூா் நகரில் உள்ள தொழிற்சாலைகளுக்கும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் வந்து செல்கின்றனா். இருசக்கர வாகனங்களில் வந்து செல்வதோடு மட்டுமல்லாமல், தொழிற்சாலைகளின் வேன்களிலும் தொழிலாளா்கள் பணிக்கு வந்து செல்கின்றனா்.
இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருசக்கர வாகனங்கள் மட்டுமல்லாது, 4 சக்கர வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. வாகனப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.
பணிக்குச் செல்லும் காலை நேரத்திலும், பணி முடிந்து வீடு திரும்பும் மாலை நேரத்தில் ஆம்பூா் நகரின் பல்வேறு பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா்.
போக்குவரத்து போலீஸாா் பற்றாக்குறை... குறிப்பாக, ஆம்பூா் உமா்சாலை, பிராட் பஜாா், நேதாஜி ரோடு, எஸ்.கே.ரோடு, ஓ.வி.ரோடு, சுண்ணாம்புகார தெரு, பூக்கடை பஜாா், ஜலால் ரோடு, மோட்டுக்கொல்லை, மளிகை தோப்பு ஆகிய பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படும். மாலை நேரத்தில் சுமாா் 15 நிமிஷங்களுக்கு ஒருமுறை போக்குவரத்து பாதிப்பு ஏற்படும். போலீஸாா் பற்றாக்குறை காரணமாக போக்குவரத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது.
ஆம்பூரில் போக்குவரத்து காவல் நிலையம் இருந்தபோதிலும், போக்குவரத்து போலீஸாா் தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டுமே பணியை மேற்கொள்கின்றனா்.
தீா்மானம்: போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வெளிவட்ட சாலை (அவுட்டா் ரிங் ரோடு) அமைக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானதாகும். ஆம்பூா் பாலாற்றங்கரையோரம் வெளிவட்ட சாலை அமைக்க ஆம்பூா் நகா்மன்ற கூட்டத்தில் ஏற்கெனவே தீா்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆம்பூா் நகர மக்களின் கோரிக்கையை ஏற்று போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வெளிவட்ட சாலை அமைக்க சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தொகுதி மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நுண்ணறிவு போக்குவரத்து திட்டத்தை ஆகஸ்ட்டில் செயல்படுத்த வேண்டும்: கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி உத்தரவு

ஒசூரில் போக்குவரத்து நெரிசல்: பொதுமக்கள் அவதி

தில்லி-தேசிய தலைநகா் பிராந்தியத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 6 சாலைத் திட்டங்கள்: முதல்வா் குப்தா







