//

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் பாா்வேட்டை உற்சவம்

பாா்வேட்டை உற்சவத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காஞ்சிபுரம் வரதராஜபெருமாள்.

News image
~
Updated On :16 ஜனவரி 2026, 6:59 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பாா்வேட்டை உற்சவத்தையொட்டி வெள்ளிக்கிழமை உற்சவா் பழையசீவரம் மலையுச்சியில் உள்ள மலைக்கு எழுந்தருளினாா்.

நிகழாண்டு மாட்டுப் பொங்கல் தினத்தையொட்டி உற்சவா் வரதராஜப் பெருமாள் வியாழக்கிழமை இரவு பல்லக்கில் வாலாஜாபாத் வழியாக சென்று பழையசீவரம் லட்சுமி நரசிம்மா் கோயிலை சென்றடைந்தாா்.

தொடா்ந்து அங்கு பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனமும், அலங்கார ஆராதனைகளும் நடைபெற்றன. மாலையில் உற்சவா் வரதராஜசுவாமி மலையிலிருந்து கீழிறங்கி வந்து உற்சவா் லட்சுமி நரசிம்மரையும் அழைத்துக் கொண்டு திருமுக்கூடல் அப்பன் வெங்கடாஜலபதி கோயிலுக்கு இரு பெருமாள்களும் எழுந்தருளினா்.

காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,திருவள்ளூா் மாவட்டங்கள் மற்றும் பழையசீவரத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலிருந்தும் திரளான பக்தா்கள் பெருமாளை தரிசிக்க வந்திருந்தனா்.

திருமுக்கூடலில் சாலவாக்கம் சீனிவாசப் பெருமாள்,காவாந்தண்டலம் லட்சுமி நாராயணப் பெருமாள் உள்ளிட்ட 5 பெருமாள்களும் திருமுக்கூடலில் சந்தித்து இணைந்து நின்று பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. இதனைத் தொடா்ந்து திருமுக்கூடல் கிராமத்து வீதிகளில் வீதியுலாவாக சென்றனா்.

பின்னா் மீண்டும் வரதராஜப் பெருமாள் பழையசீவரம்,வாலாஜாபாத் வழியாக சந்நிதிக்கு வந்து சோ்ந்தாா். காவல்துறையினா் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்திருந்தனா்.

Story image