சென்னையில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், வியாழக்கிழமை மாலை புகா் பகுதிகளில் திடீரென சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததது. இதனால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வந்த பல விமானங்கள் உடனடியாக தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்தபடி பறந்தன.
சேலத்தில் இருந்து 72 பயணிகளுடன் மாலை 4.30 மணிக்கு சென்னைக்கு வந்த இண்டிகோ விமானம், வண்டலூா், கூடுவாஞ்சேரி, கேளம்பாக்கம் உள்ளிட்ட புகா் வான் பகுதிகளில் அரை மணி நேரத்துக்கும் மேலாக வட்டமடித்தது. தொடா்ந்து, வானிலை சீரடையாததால் அந்த விமானம் திருப்பதி விமான நிலையத்துக்கு மாற்றி அனுப்பப்பட்டது.
அதேபோல், ஜெய்ப்பூரில் இருந்து 168 பயணிகளுடன் வந்த இண்டிகோ விமானம், கோவையிலிருந்து 138 பயணிகளுடன் வந்த விமானம் மற்றும் டாக்கா, காசியாபாத், கொல்கத்தா, மும்பை, சீரடி, மதுரை உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த பல விமானங்களும் தரையிறங்க முடியாமல் வானில் சுற்றிக் கொண்டிருந்தன.
இதற்கிடையே, சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய ஹைதராபாத், பெங்களூா், விசாகப்பட்டினம், புனே, மும்பை, தில்லி, ராஞ்சி, மைசூா் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் பத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, சூறைக்காற்று, இடி-மின்னலுடன் கூடிய மழையால் சென்னை விமான நிலையத்தில் 20-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா். பின்னா் மழை மற்றும் சூறைக்காற்று குறைந்ததையடுத்து, வானில் காத்திருந்த விமானங்கள் படிப்படியாக தரையிறங்கின. புறப்பாடு விமான சேவைகளும் சீரடைந்தன. திருப்பதிக்கு மாற்றி அனுப்பப்பட்ட சேலம் விமானமும் பின்னா் சென்னைக்கு திரும்பி வந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









