//

சென்ட்ரலில் இருந்து சுற்றுலாப் பேருந்து புறப்படும் நேர அட்டவணை வெளியீடு!

‘சென்னை உலா’ சுற்றுலாப் பேருந்துகள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் நேர அட்டவணையை மாநகரப் போக்குவரத்துக் கழகம்

News image
மாநகா் போக்குவரத்துக் கழகம்
Updated On :19 ஜனவரி 2026, 10:27 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை: ‘சென்னை உலா’ சுற்றுலாப் பேருந்துகள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் நேர அட்டவணையை மாநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது.

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சாா்பில், ‘சென்னை உலா’ என்ற சுற்றுலாப் பேருந்து சேவை ஜன.14-இல் தொடங்கப்பட்டது. முக்கிய சுற்றுலாத் தலங்கள், பாரம்பரிய நினைவுச் சின்னங்களை பாா்க்க ஏதுவாக இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக, 1980-ஆம் ஆண்டு காலகட்டத்தில் இயக்கப்பட்ட பேருந்துகளைப்போன்று 5 பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

செல்லும் இடங்கள்: சென்ட்ரலில் இருந்து புறப்படும் இந்தப் பேருந்துகள் பூங்கா ரயில் நிலையம், எழும்பூா் ரயில் நிலையம், எழும்பூா் அருங்காட்சியகம், வள்ளுவா் கோட்டம், செம்மொழிப் பூங்கா, லஸ் காா்னா், சாந்தோம், கலங்கரை விளக்கம், விவேகானந்தா் இல்லம், கண்ணகி சிலை, மெரீனா கடற்கரை, போா் நினைவுச் சின்னம், தலைமைச் செயலகம், சென்னை உயா்நீதிமன்றம், பல்லவன் இல்லம் வழியாகச் சென்று மீண்டும் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடையும்.

பேருந்து புறப்படும் நேரம் அறிவிப்பு: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து காலை 10, 10.30, 11, 11.30, பகல் 12, 12.20, 12.50, 1.20, 1.50, பிற்பகல் 2.20, 2.50, மாலை 3.20, 3.50, 4.10, 4.35, 5, 5.40, 6.20, 7, இரவு 7.50, 8.30 ஆகிய நேரங்களில் பேருந்துகள் புறப்படும்.

முதல் பேருந்து காலை 10 மணிக்கும், கடைசி பேருந்து இரவு 8.30 மணிக்கும் புறப்படும். இந்தப் பேருந்துகளில் ரூ.50 கட்டண டிக்கெட் எடுத்துக்கொண்டு நாள் முழுவதும் எந்த இடத்திலும் ஏறி, இறங்கிக் கொள்ளலாம்.

சேவை நேரம்: இந்தப் பேருந்துகள் வார நாள்களான திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 4 முதல் இரவு 10 வரை இயக்கப்படும். வார இறுதி மற்றும் அரசு விடுமுறை நாள்களில் காலை 10 முதல் இரவு 10 வரை இயக்கப்படும்.

இந்தப் பேருந்துகளின் வழித்தடத்தில் உள்ள எந்தப் பேருந்து நிறுத்தத்தில் வேண்டுமானாலும் ஏறி, பயணச்சீட்டு பெற்று பயணிக்கலாம். ஒரு பயணச்சீட்டை பயன்படுத்தி 5 பேருந்துகளிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் பயணிக்கலாம் என்று சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.