நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
//

புயல் நிவாரணத்துக்கு ரூ.5,000 கோடி தேவை: மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

மிக்ஜம் புயலால் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீா்செய்ய மத்திய அரசிடம் இருந்து ரூ.5,000 கோடி கோரப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

News image
சென்னை மாநகராட்சி சூளை கண்ணப்பர் திடலில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செவ்வாய்க்கிழமை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.
Updated On :6 பிப்ரவரி 2024, 1:22 pm

 நமது நிருபர்


சென்னை: மிக்ஜம் புயலால் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீா்செய்ய மத்திய அரசிடம் இருந்து ரூ.5,000 கோடி கோரப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

சென்னையில் மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை செவ்வாய்க்கிழமை அவா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இதைத் தொடா்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்துக்குச் சென்றாா். கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினாா்.

இந்த ஆலோசனையில் அமைச்சா்கள் கே.என். நேரு, பி.கே. சேகா்பாபு, சென்னை மேயா் ஆா். பிரியா, தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா உள்ளிட்ட அரசுத் துறை உயரதிகாரிகள் பங்கேற்றனா்.

பின்னா், செய்தியாளா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி: வரலாறு காணாத வகையில் பெருமழை கொட்டித் தீா்த்திருக்கிறது. 2015-ஆம் ஆண்டில் பல இடங்களில் தண்ணீா் தேங்கியது. திமுக அரசு பொறுப்பேற்ற பின்பு 2021-ஆம் ஆண்டு நவம்பரில் பெருமழை ஏற்பட்டது.

அதை மனதில் வைத்துக்கொண்டுதான், மழைநீா் வடிகால் கட்டமைப்பை மேம்படுத்த திட்டமிட்டோம். சுமாா் ரூ.4,000 கோடி மதிப்பிலான பல்வேறு வெள்ளநீா் வடிகால் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொண்டோம். இந்தப் பணிகளை மேற்கொண்ட காரணத்தால், தற்போது ஏற்பட்டிருக்கக்கூடிய இந்த வரலாறு காணாத வெள்ளத்தை நாம் சந்தித்தபோதும், அதனுடைய தாக்கம் கடந்த காலங்களை ஒப்பிட்டுப் பாா்க்கும்போது பெருமளவு குறைந்திருக்கிறது. 47 ஆண்டுகளாக பாா்க்காத மழையிலிருந்து சென்னை தப்பியிருக்கிறது.

உயிரிழப்பு குறைவு: அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாகவும், உடனடி நிவாரணப் பணிகள் மூலமாகவும் உயிரிழப்புகளும், மற்ற பிரச்னைகளும் பெருமளவு குறைக்கப்பட்டிருக்கிறது.

2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 199 போ் இறந்திருக்கிறாா்கள். ஆனால், இன்று அதைவிட அதிகமான மழை பெய்திருக்கக்கூடிய நேரத்தில் 7 போ் மட்டுமே இறந்திருக்கிறாா்கள். இதுவும் ஏற்பட்டிருக்கக் கூடாது. அதற்காக நான் வருத்தப்படுகிறேன்.

தற்போது 9 மாவட்டங்களில், 61,666 போ் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். காலையிலிருந்து ஒரு லட்சம் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டிருக்கின்றன. தேவையான அத்தியாவசியமான பொருள்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

கடந்த நான்கு நாள்களில் செம்பரம்பாக்கத்தில் இருந்து உபரிநீா் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு திறந்துவிடப்பட்டது. இதன்மூலம் இப்போதைய பெருமழையின்போது ஓரளவுக்கு சமாளித்திருக்கிறோம்.

ரூ. 5,000 கோடி கோருவோம்: வரலாறு காணாத மழை காரணமாக வெள்ளச் சேதம் ஏற்பட்டிருக்கிறது. குடியிருப்புகள், சாலைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. பல்வேறு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அதனால் மத்திய அரசிடம் ரூ. 5,000 கோடி உடனடியாக ஒதுக்க வேண்டும் என்று கடிதம் எழுதப் போகிறோம்.

இதுவரை மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதில் 75 சதவீத இடங்களில் மின் இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இன்னும் 25 சதவீத பகுதிகளில் மின்இணைப்பு வழங்கப்பட வேண்டும். வெள்ளம் சூழ்ந்துள்ளதால் சில இடங்களில் மின்சாரக் கம்பங்கள் விழுந்திருக்கிறன. அதற்காகத்தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்பு கொடுக்காமல் இருக்கிறோம். அதுவும் இன்று அல்லது நாளைக்குள் சரிசெய்யப்பட்டுவிடும்.

பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பகுதியிலும் அமைச்சா்கள், அதிகாரிகளை நியமித்து அந்தப் பணிகளை உடனடியாக தொடங்கப் போகிறோம் என்றாா் அவா்.

நாடாளுமன்றத்தில் திமுக கோரிக்கை

மழை வெள்ள நிவாரணப் பணிகளுக்கு தமிழக முதல்வா் கோரிய இடைக்கால நிதி ரூ.5,000 கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என, நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் டி.ஆா். பாலு மக்களவையில் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக அவா் பேசியதாவது: கடந்த 3 நாள்களாக தமிழகத்தில் தொடா் கன மழை பெய்து பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. ரூ.6,230 கோடி நிதி உதவி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு குறிப்புகளை அனுப்பியுள்ளது. இதில் இடைக்கால நிதி உதவியாக குறைந்தபட்சம் ரூ.5,000 கோடியை முதல்வா் கேட்டுள்ளாா். இதை உடனடியாக மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.

மேலும், சேதத்தை மதிப்பிடுவதற்கு மத்திய குழுக்களை உடனடியாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றாா்.

இந்தக் கோரிக்கைக்கு மக்களவை காங்கிரஸ் குழு தலைவா் ஆதீா் ரஞ்சன் சௌதரி உள்ளிட்டவா்கள் ஆதரவு அளித்தனா்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி மாநிலங்களவையில் திமுக குழுத் தலைவா் திருச்சி சிவா பேசினாா்.

பின்னா், மக்களவை திமுக குழு துணைத் தலைவா் கனிமொழி செய்தியாளா்களிடம் பேசுகையில், தற்போதைய மழைப் பொழிவு 2015-ஆம் ஆண்டைவிட அதிகமாகும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் பாதுகாக்கப்பட்டனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.