//

அதிகாரிகள் பனிப்போர்: பாதியில் நிற்கிறது பாலம்: மக்கள் அவதி

கீழ்ப்பாக்கம், ஆஸ்பிரான் தோட்டத்தில் கட்டப்பட்டு வந்த பாலம் பாதியில் நிற்பதால், கடந்த 5 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:40 pm

ஆ. கோபிகிருஷ்ணா

கீழ்ப்பாக்கம், ஆஸ்பிரான் தோட்டத்தில் கட்டப்பட்டு வந்த பாலம் பாதியில் நிற்பதால், கடந்த 5 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாகி வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இது குறித்து புகார் அளித்தும் போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சென்னை, ஆஸ்பிரான் தோட்டம், கீழ்ப்பாக்கம் பவன்ஸ் பள்ளி அருகில் குறுகிய பாலம் ஒன்று உள்ளது. ஓட்டேரி நல்லா கால்வாயில் இருந்து வரும் கழிவுநீர் மற்றும் மழைநீர் இந்த பாலத்தின் வழியாக சென்று சென்ட்ரல் பங்கிங்ஹாம் கால்வாயில் கலக்கிறது.

புது ஆவடி சாலையில் இருந்து புரசைவாக்கம், எழும்பூர், சென்ட்ரல், பாரிமுனை செல்லும் மக்கள் பெரும்பாலும் இந்த பாலத்தின் வழியாகவே செல்கின்றனர்.

போக்குவரத்து நெரிசல்: நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் அவ்வழியே பயணிப்பதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக அந்த பாலத்தை அகலப்படுத்தும் பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டது.

ஒப்பந்ததாரர்களைக் கொண்டு அந்த பாலத்தை அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பணிகள் தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே பொதுப்பணித் துறைக்கும், மாநகராட்சிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாலம் கட்டும் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து இன்று வரை அந்தப் பாலம் முழுமையடையாமல் பாதியில் நிற்கிறது. இதனால் முன்பு இருந்ததை விட தற்போது அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருவதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் சிலர் கூறியதாவது:-

பவன்ஸ் பள்ளி அருகில் கட்டப்பட்டு வந்த பாலம் பாதியில் நிறுத்தப்பட்டதால், இரு புறமும் பிளாஸ்டிக் தடுப்புகள் வைத்து மறைக்கப்பட்டுள்ளன. மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கும் அந்த குறுகிய பாலத்தின் வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன.

இதைத் தவிர பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்பவர்கள் அதிகளவில் இந்த பாலத்தை பயன்படுத்துவதால், காலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மேலும் 5 ஆண்டுகளாக பாலம் பாதி கட்டப்பட்ட நிலையில் இருப்பதால், அதன் உறுதித்தன்மையை இழந்து விடும் அபாயம் உள்ளது என்றனர்.

பொதுப்பணித்துறையா - மாநகராட்சியா: ஆஸ்பிரான் தோட்டப் பாலம் பாதியில் நிற்பதற்கு நாங்கள் காரணமில்லை என்று பொதுப்பணித்துறையும், மாநகராட்சியும் ஒரு சேர பதிலளிக்கிóன்றன.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:- பொதுப்பணித் துறையின் தலையீட்டின் காரணமாகவே ஆஸ்பிரான் தோட்டத்தில் கட்டப்பட்டு வந்த பாலம் பாதியில் நிறுத்தப்பட்டது. பாலத்துக்கு அடியில் தூண்கள் அமைக்கப்பட்ட பிறகு அதன் உயரத்தை மேலும் அதிகரிக்குமாறு பொதுப்பணித் துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர். அதன் காரணமாகவே பாலம் கட்டும் பணிகளை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது என்று அவர்கள் தெரிவித்தனர்.

இந்த பிரச்னை குறித்து பொதுப்பணிóத் துறை அதிகாரிகள் கூறியது:-

நீர்வழித் தடத்துக்கு மேலே அந்த பாலம் அமைக்கப்படுகிறது. எனவே நீரோட்டத்தை பாதிக்காத வகையில் பாலம் அமைக்குமாறு பொதுப்பணித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது உண்மைதான்.

ஆனால் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் பாலம் கட்டும் பணிகளுக்கு இடையூறாக பொதுப்பணித் துறை செயல்படவில்லை. அந்தப் பாலத்தை சீரமைக்க வேண்டிய பொறுப்பு மாநகராட்சிக்குதான் உண்டு என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருதரப்பினரும் தங்கள் மீது குற்றமில்லை என்றுகூறி பிரச்னையில் இருந்து ஒதுங்கிக் கொண்டுள்ள நிலையில் இந்தப் பிரச்னைக்கு அரசுதான் தீர்வு காணவேண்டும் என்பதே பொதுமக்களின் கருத்தாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.