சென்னை அருகே உள்ள புழலில் அமைக்கப்பட்டுள்ள மத்திய சிறையில் சுமார் 7 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சிறை புழல்- 1, புழல்- 2, பெண்கள் சிறை என 3 பிரிவுகளாக 212 ஏக்கரில் அமைந்துள்ளது. இதில், புழல் 1-ல் சிறையில் விசாரணைக் கைதிகளும், புழல் 2-ல் தண்டனைக் கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர். ஆசியாவிலேயே மிகப்பெரிய சிறையாகக் கருதப்படும் இந்தச் சிறை, சென்னையில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மிகவும் நவீன வசதிகளுடனும், அதிநவீன பாதுகாப்பு வசதிகளுடனும் கட்டப்பட்டுள்ள இந்தச் சிறை, கைதிகளுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் இந்த சிறையில் உள்ள கைதிகள் சிகிச்சை பெற போதிய வசதிகள் இல்லை., வெளி நோயாளி சிகிச்சைப் பிரிவு மட்டுமே உள்ளது. இங்கு பணிபுரியும் இரு மருத்துவர்கள், தினமும் சுமார் 400 கைதிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.