//

"இன்வெர்ட்டர்கள்' விற்பனை அமோகம்

சென்னை, ஏப். 5: தொடர் மின்வெட்டின் காரணமாக இன்வெர்ட்டர்கள் அமோகமாக விற்பனையாகி வருகிறது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 80 சதவீதம் வரை விற்பனை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் 2 மண

News image
Updated On :2 ஜனவரி 2024, 4:47 pm

ஆ. கோபிகிருஷ்ணா

சென்னை, ஏப். 5: தொடர் மின்வெட்டின் காரணமாக இன்வெர்ட்டர்கள் அமோகமாக விற்பனையாகி வருகிறது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 80 சதவீதம் வரை விற்பனை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் 2 மணி நேரமும், இதர மாவட்டங்களில் 8 மணி நேரத்துக்கு அதிகமாகவும் மின்வெட்டு அமலில் உள்ளது. இதனால், வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களின் வரிசையில் இன்வெர்ட்டரும் இப்போது இடம் பிடித்துள்ளது.

ஜெனரேட்டரைவிட அளவும், செலவும், பராமரிப்பும் குறைவு என்பதால் பொதுமக்கள் இன்வெர்ட்டரையே அதிகம் விரும்புகின்றனர். இப்போது கோடை காலம் தொடங்கியிருப்பதால் இன்வெர்ட்டர்களின் தேவை மிகவும் அதிகரித்துள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு மட்டும் சுமார் 30- க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் இன்வெர்ட்டர் தயாரிப்பில் இறங்கியுள்ளன. ஏற்கெனவே, 75 நிறுவனங்களின் தயாரிப்புகள் சந்தையில் இருப்பதால் அந்த நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. இது குறித்து இன்வெர்ட்டர் உற்பத்தியாளர்கள் கூறியது:

குறைந்தபட்சம் 2 மணி நேரம் முதல் அதிகபட்சமாக 15 மணி நேரம் வரை இயங்கும் இன்வெர்ட்டர்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. உயர் மின் அழுத்தம், பேட்டரியில் நீரின் அளவு போன்றவற்றை அறிந்து கொள்ளும் வண்ணம் எல்.சி.டி. திரையுடன்கூடிய நவீன இன்வெர்ட்டர்களும் உள்ளன. எளிதாகக் கையாளும் விதத்தில் உள்ளதால் இப்போது 60 சதவீத வீடுகளில் இன்வெர்ட்டர்கள் உள்ளன. இரண்டு மின் விளக்கு, மின் விசிறி முதல், ஏ.சி, ப்ரிட்ஜ் என சகலவிதமான மின்சாதனங்களையும் இயக்கும் வகையில் பல்வேறு வகையான இன்வெர்ட்டர்கள் உள்ளன என்றனர்.

அடிக்கடி ஏற்படும் மின்வெட்டினாலும், கோடை வெயில் காரணமாகவும் இன்வெர்ட்டர்கள் இப்போது அமோகமாக விற்பனையாகி வருகின்றன.

சென்னை தவிர இதர மாவட்டங்களில் சில பகுதிகளில் இன்வெர்ட்டர்களுக்கு கடும் தட்டுப்பாடும் நிலவுகிறது. முன்னணி நிறுவனங்களின் இன்வெர்ட்டர்களுக்காக சில இடங்களில் முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்தே வாங்கும் நிலை உள்ளது. எனினும், பெரும்பாலான இன்வெர்ட்டர்களின் ஆரம்ப விலையே ரூ.10 ஆயிரமாக இருப்பதனால் நடுத்தர மக்கள் இன்னும் இருளில்தான் இருக்க வேண்டிய நிலை உள்ளது.

பாதுகாப்புக்கு....

பேட்டரியில் நீரின் அளவை சரி பார்க்க வேண்டும்.

குறிப்பிட்ட கால இடைவெளியில் பேட்டரியில் வடிநீரை மாற்ற வேண்டும்.

பேட்டரியின் மின்முனைகளை துருப் பிடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

தரமான வயர்களைக் கொண்டு இணைப்பு தர வேண்டும்.

தரச் சான்றிதழ் பெற்ற நிறுவனங்களின் இன்வெர்ட்டர்களை வாங்குவது நல்லது.

காற்றோட்டமான இடத்தில் இன்வெர்ட்டரையும், பேட்டரியையும் வைப்பது சிறந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.