/

அமெரிக்காவில் அவசரநிலை! உறைபனி, பனிப்புயல்!! 15 கோடி மக்கள் பாதிப்பு

உறைபனி, பனிப்புயல் காரணமாக அமெரிக்காவில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
உறைபனி - AP
Updated On :24 ஜனவரி 2026, 7:19 am

இணையதளச் செய்திப் பிரிவு

அமெரிக்காவில் ஏற்கனவே உறைபனி நிலை ஏற்பட்டு கடுமையான பாதிப்பை சந்தித்து வரும் நிலையில், அங்கு பனிப்புயல் வீசவிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அமெரிக்காவின் நியு மெக்ஸிகோ பகுதியில் வாழும் 15 கோடி மக்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். வெள்ளிக்கிழமை முதல் பிலடெல்பியா, நியூ யார்க், பாஸ்டன் உள்ளிட்ட நகரங்களில் கடும் உறை பனி காரணமாக சாலைகள் முழுவதும் பனிக்கட்டிகளாகக் காட்சியளிக்கிறது. இதனால் சாலைகள் போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. பல இடங்களில் பனிமழை பெய்து வருகிறது.

இதனுடன், அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் அதாவது 15 கோடி அமெரிக்கர்கள் மிகப்பெரிய பனிப்புயலையும் எதிர்கொள்ளவிருக்கிறார்கள்.

Story image

உறைபனி, பனிமழை உள்ளிட்டவற்றுடன் கடும் சேதங்களை உருவாக்கும் பனிப்புயல் காரணமாக பல அமெரிக்க மாகாணங்கள் அவசரநிலையை அறிவித்துள்ளன.

முன்னெச்சரிக்கையாக அமெரிக்க வான் வழியாகச் செல்லும் விமானங்கள் உள்பட 2,000 விமானங்கள் ரத்து மற்றும் வேறு பாதைகளில் திருப்பி விடப்பட்டுள்ளன.

Story image

பனிப்புயல் காரணமாக, நீண்ட நேரத்துக்கு மின் தடை உள்ளிட்ட அபாயங்களை எதிர்கொள்ள நேரிடலாம். மரங்கள் முறிந்து விழலாம், போக்குவரத்துத் தடை போன்றவை ஏற்படலாம் என்றும், மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடுமையான உறைபனி காரணமாக, வெறும் 5 நிமிடங்கள் வீட்டிலிருந்து வெளியே வருவதும் கடுமையான உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

வெளியில் வேலை செய்யும் மக்களுக்காக பொதுவிடங்களில் வெப்ப மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.