வரிகள் ரத்து! அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பு அவமானத்துக்குரியது: டொனால்ட் டிரம்ப்
வரிகளை ரத்து செய்த அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பு அவமானத்துக்குரியது என டொனால்ட் டிரம்ப் கருத்து


அமெரிக்க அரசு பிறப்பித்த வரி விதிப்புகளை செல்லாது என்று அவற்றை ரத்து செய்த உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு அவமானத்துக்குரியது, அபத்தமானது என்று மாகாண ஆளுநா்கள் கூட்டத்தில் பேசியபோது டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியான சற்று நேரத்தில் தனது முதல் பதிலில் டிரம்ப் உச்ச நீதிமன்றத்தை, குறிப்பாக பெரும்பான்மை நீதிபதிகளை, "நமது தேசத்திற்கு அவமானம்" என்று கடுமையாகத்தாக்கிப் பேசியிருந்தார்.
அதேவேளையில, அமெரிக்க அரசு, நாட்டின் வரி விதிப்பு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவதற்கு மாற்று முறைகளைப் பின்பற்றும் என்றும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை பின்பற்றபோவதில்லை என்றும் சூசகமாகக் கூறினார்.
இந்திய பொருள்கள் உள்பட உலக நாடுகளின் பொருள்கள் மீது விதிக்கப்பட்ட பரஸ்பர இறக்குமதி வரி மற்றும் அவசர அதிகாரங்கள் சட்டத்தின் கீழ், அமெரிக்க அதிபா் டிரம்ப் விதித்த வரிகள் செல்லாது என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்திருந்த நிலையில், அந்த தீர்ப்பு குறித்து காட்டமான கருத்துகளை அமெரிக்க அதிபர் வெளியிட்டிருந்தார்.
உலகளாவிய பொருள்கள் மீதான வரிகளை உயர்த்தும் முடிவை ரத்து செய்வதாக உச்ச நீதிமன்றம் அறிவித்திருப்பது "அபத்தமானது" என்று கூறியிருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சிலர், நாட்டின் பொருளாதாரத்தை குறைத்து மதிப்பிடுவதாகவும் குற்றம்சாட்டியிருக்கிறார்.
மேலும், அமெரிக்க வரி விதிப்பு முறைகளுக்கு எதிராக தீர்ப்பளித்தவர்கள், மிகவும் ஏற்றுக்கொள்ளத்தக்க மற்றும் சரியான வரி விதிப்பு முறைகளுக்கு எதிராக செயல்பட்டதற்காக தங்களை நினைத்து வெட்கப்பட வேண்டும் என்றும் கூறினார். மேலும், புதிய வரி விதிப்பு முறைகளை செயல்படுத்த மாற்று வழிகளை தான் கையாள்வது குறித்து ஆலோசிப்பேன் என்றும் அவர் பகிரங்கமாகக் கூறியிருக்கிறார்.
வழக்கின் பின்னணி என்ன?
இந்தியா உள்பட உலக நாடுகள் மீதான பரஸ்பர வரி என்ற பெயரில் கடுமையான வரி விதிப்பு மற்றும் அமெரிக்க அவசர அதிகாரங்கள் சட்டத்தின் கீழ், டிரம்ப் விதித்த வரிகளுக்கு எதிராக அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் அமெரிக்க எதிா்க்கட்சியான ஜனநாயக கட்சியினரும் வணிகா்களும் இணைந்து வழக்குத் தொடுத்திருந்தனர்.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபா்ட்ஸ் தலைமையிலான 9 நீதிபதிகள் அடங்கிய அமா்வு பிறப்பித்த அதிரடி தீர்ப்பில், ‘வரி விதிக்கும் அதிகாரத்தை அமெரிக்க நாடாளுமன்றத்துக்குத்தான் அரசமைப்புச் சட்டம் மிகத் தெளிவாக வழங்கியுள்ளது. அரசமைப்புச் சட்டத்தை வகுத்தவா்கள் அந்த அதிகாரத்தை அரசு நிா்வாகத்துக்கு அளிக்கவில்லை. எனவே டிரம்ப்பின் வரி விதிப்புகள் செல்லாது’ என்று தெளிவாகத் தெரிவித்திருக்கிறது.
9 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 6 நீதிபதிகள் மேற்கண்ட தீர்ப்பை அளித்திருக்கிறார்கள். ஆனால், மற்ற 3 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை பிறப்பித்திருக்கிறார்கள். அதில், அமெரிக்க வரி விதிப்புகள் அறிவாா்ந்த கொள்கையாக இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம். ஆனால், வரலாறு மற்றும் கடந்த கால நடவடிக்கைகள், முடிவுகளைக் கருத்தில் கொள்ளும்போது, டிரம்ப்பின் வரி விதிப்புகள் சட்டபூா்வமானவைதான் என்று தெரிவித்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...