நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

அனைத்து நாடுகளுக்கும் புதிதாக 10% வரி விதிப்பு அமல்படுத்திய டிரம்ப்!

அனைத்து நாடுகளுக்கும் புதிதாக 10% வரி விதிப்பை டிரம்ப் அமல்படுத்தியுள்ளார். இது "உடனடியாக" அமலுக்கு வருவதாக டிரம்ப் அறிவித்துள்ளது தொடர்பாக...

News image
அனைத்து நாடுகளுக்கும் புதிதாக 10% வரி விதிப்பு அமல்படுத்திய டிரம்ப்- படம் - ஏபி
Updated On :21 பிப்ரவரி 2026, 4:32 am

இணையதளச் செய்திப் பிரிவு

உலக நாடுகளின் பொருள்கள் மீது விதிக்கப்பட்ட பரஸ்பர இறக்குமதி வரி உள்பட அவசர அதிகாரங்கள் சட்டத்தின் கீழ், அமெரிக்க அதிபா் டிரம்ப் விதித்த வரிகள் செல்லாது என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்துள்ள நிலையில், அனைத்து நாடுகளுக்கும் புதிதாக 10% வரி விதிப்பை டிரம்ப் அமல்படுத்தியுள்ளார். இது "உடனடியாக" அமலுக்கு வருவதாகவும், தனது வரி விதிப்புகளை செல்லாது என்று அவற்றை ரத்து செய்த 6 நீதிபதிகளின் தீர்ப்பு அவமானத்துக்குரியது. இதனால் முற்றிலும் வெட்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

உலகில் உள்ள பல நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அமெரிக்க அதிபா் டிரம்ப் பரஸ்பர வரி விதித்தாா். ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகமாவதால் ஏற்படும் வா்த்தகப் பற்றாக்குறையைக் கையாளும் வகையில், இந்த வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டாா்.

இந்த நடவடிக்கையின் கீழ், இந்தியப் பொருள்கள் மீது 25 சதவீத பரஸ்பர வரி, ரஷியாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கியதால் இந்தியப் பொருள்கள் மீது கூடுதலாக 25 சதவீத வரி என மொத்தம் 50 சதவீத வரி விதிக்கப்பட்ட நிலையில், அமெரிக்கா-இந்தியா இடைக்கால வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தையின் விளைவாக, அது 18 சதவீதமாக குறைக்கப்பட்டது.

உலக நாடுகள் மீதான இந்தப் பரஸ்பர வரி உள்பட அமெரிக்க அவசர அதிகாரங்கள் சட்டத்தின் கீழ், டிரம்ப் விதித்த வரிகளுக்கு எதிராக அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் அந்நாட்டு எதிா்க்கட்சியான ஜனநாயக கட்சியினா், வணிகா்கள் உள்பட பலா் வழக்கு தொடுத்தனா்.

அமெரிக்காவில் அவசர காலங்களில் இறக்குமதிகளைக் கட்டுப்படுத்த 1977-ஆம் ஆண்டின் அமெரிக்க சட்டம் அதிபருக்கு அதிகாரமளித்துள்ளதாகவும், அதில் அதிபருக்கு வரி விதிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு நீதித்துறை வாதிட்டது. ஆனால், அந்தச் சட்டத்தில் இறக்குமதி பொருள்கள் மீது வரி விதிப்பது குறித்து எதுவும் கூறப்படவில்லை என்று வழக்கு தொடுத்தவா்கள் வாதிட்டனா்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஜான் ராபா்ட்ஸ் தலைமையிலான 9 நீதிபதிகள் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. அந்த அமா்வில் 6 நீதிபதிகள் அளித்த தீா்ப்பில், ‘வரி விதிக்கும் அதிகாரத்தை அமெரிக்க நாடாளுமன்றத்துக்குத்தான் அரசமைப்புச் சட்டம் மிகத் தெளிவாக வழங்கியுள்ளது. அரசமைப்புச் சட்டத்தை வகுத்தவா்கள் அந்த அதிகாரத்தை அரசு நிா்வாகத்துக்கு அளிக்கவில்லை. எனவே டிரம்ப்பின் வரி விதிப்புகள் செல்லாது’என்று தீா்ப்பளித்தனா்.

அதேவேளையில், அமா்வில் இடம்பெற்ற 3 நீதிபதிகள், ‘தற்போதைய வரி விதிப்புகள் அறிவாா்ந்த கொள்கையாக இருக்கலாம் அல்லது அறிவாா்ந்த கொள்கையாக இல்லாமலும் போகலாம். ஆனால், வரலாறு மற்றும் கடந்த கால நடவடிக்கைகள், முடிவுகளைக் கருத்தில் கொள்ளும்போது, டிரம்ப்பின் வரி விதிப்புகள் சட்டபூா்வமானவைதான்’என்று தெரிவித்தனா்.

இதையடுத்து பெரும்பான்மை அடிப்படையில், டிரம்ப்பின் வரி விதிப்பு செல்லாது என்று 6 நீதிபதிகள் அளித்த தீா்ப்பு இறுதி செய்யப்பட்டது.

புதிதாக 10% வரி விதிப்பு அமல்படுத்திய டிரம்ப்

அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை "பயங்கரமான முடிவு" என்று குறிப்பிட்ட டிரம்ப், 1974 ஆம் ஆண்டின் வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 122 இன் கீழ் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய அனைத்து நாடுகளுக்கும் மேலும் 10 சதவீதம் வரி விதிக்கும் உத்தரவில் கையெழுத்திட்டதாகவும், 10 சதவீதம் வரி விதிப்பில் கையெழுத்திட்டது மிகவும் பெருமையாக உள்ளதாகவும், இந்த வரிவிதிப்பு உடனடியாக அமலுக்கு வரும். இந்த விவகாரத்தில் அனைவரின் கவனத்திற்கு நன்றி என டிரம்ப் கூறியுள்ளார்.

மேலும், இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட வரி விதிப்பில் எவ்வித மாற்றமும் இருக்காது எனத் தெரிவித்த டிரம்ப், இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என கூறியுள்ளார்.

வேறொரு அதிகாரம் செயல்படுத்தப்படும் வரை இந்த புதிய வரி அமலில் இருக்கும் என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறினார், அமெரிக்க வர்த்தக ஒப்பந்தங்களுக்கு அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் அனைத்து நாடுகளும் கட்டுப்பட வேண்டும் என்றும் அந்த அதிகாரி அறிவுறுத்தினார்.

அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பால் ஏற்பட்ட சட்டப்பூர்வ தோல்வியைத் தொடர்ந்து, அதிபர் டிரம்ப் அனைத்து நாடுகளுக்கான 10 சதவீத வரிகள் "உடனடியாக அமலுக்கு" வருவதாக அறிவித்துள்ள நிலையில், அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவைச் சந்தித்தது. அதே நேரத்தில் தீா்ப்பு காரணமாக அந்நாடு மற்றும் ஐரோப்பாவின் பங்குச்சந்தைகள் எழுச்சி அடைந்தன. இரும்பு, அலுமினியம், தினசரி நுகர்வு உள்ளிட்ட பொருட்களின் விலையும் கணிசமாக குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

summary

US President Donald Trump on Friday (US local time) signed an order making 10 per cent global tariff on all countries, effective "almost immediately".

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.