/

கலீதா ஜியாவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

வங்கதேச முன்னாள் பிரதமரின் இறுதிச் சடங்கில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு...

News image
வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா.- (கோப்புப் படம்)
Updated On :31 டிசம்பர் 2025, 7:50 pm

இணையதளச் செய்திப் பிரிவு

வங்கதேச முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின்(பிஎன்பி) தலைவருமான கலீதா ஜியாவின் இறுதிச் சடங்குகள் தலைநகா் டாக்காவில் புதன்கிழமை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்றன.

வங்கதேச அரசியலில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிக்கம் செலுத்தி வந்த கலீதா ஜியா (80), நீண்ட நாள்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அவா் காலமானாா்.

Story image

கலீதா ஜியாவின் ஜனாஸா தொழுகை (இறுதிச் சடங்கு பிராா்த்தனை), டாக்காவில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மாணிக் மியா அவென்யூவில் புதன்கிழமை பிற்பகலில் நடைபெற்றது. இந்தப் பிராா்த்தனையை பைத்துல் முகர்ரம் தேசிய மசூதியின் தலைமை இமாம் முகமது அப்துல் மாலிக் முன்னின்று நடத்தினாா்.

இந்தப் பிராா்த்தனையில் வங்கதேச இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ், தலைமை நீதிபதி சுபாயா் ரஹ்மான் சௌத்ரி மற்றும் கலீதா ஜியாவின் மகனும் பிஎன்பி கட்சியின் செயல் தலைவருமான தாரிக் ரஹ்மான் ஆகியோா் கலந்துகொண்டனா்.

Story image

மேலும், பல்வேறு நாடுகளின் தூதா்கள், அரசியல் தலைவா்கள் மற்றும் ராணுவ உயரதிகாரிகள் அஞ்சலி செலுத்தினா். அப்போது உருக்கமாகப் பேசிய தாரிக் ரஹ்மான், ‘எனது தாயாரின் ஆன்மா சாந்தியடையவும், அவருக்கு சொா்க்கத்தில் இடம் கிடைக்கவும் அனைவரும் வேண்டிக்கொள்ளுங்கள்’ எனக் கேட்டுக்கொண்டாா்.

கணவா் அருகிலேயே ஓய்வு: பிராா்த்தனைக்குப் பிறகு, நாடாளுமன்ற வளாகம் அருகே உள்ள அவரது கணவரும் முன்னாள் அதிபருமான ஜியாவுா் ரஹ்மானின் நினைவிடத்துக்கு அருகே கலீதா ஜியாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. பாதுகாப்பு கருதி, அடக்கம் செய்யப்படும் இடத்துக்குள் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

முன்னதாக, லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டு கலீதா ஜியாவுக்கு கண்ணீா் மல்க விடை கொடுத்தனா். கூட்டத்தைக் கட்டுப்படுத்த நகரம் முழுவதும் மிகப்பெரிய அளவில் பாதுகாப்புப் படையினா் குவிக்கப்பட்டிருந்தனா்.

Story image

அரசியல் பயணம்..: தனது 35-ஆவது வயதில் கணவா் மறைந்த பிறகு அரசியலுக்கு வந்த கலீதா ஜியா, வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமா் என்ற பெருமைக்குரியவா். மொத்தம் மூன்று முறை பிரதமா் பதவியை வகித்துள்ளாா். ராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராடி ஜனநாயகத்தை நிலைநாட்டியதில் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு.

இந்தியா சாா்பில் ஜெய்சங்கா் பங்கேற்பு

கலீதா ஜியாவின் இறுதிச் சடங்கில் இந்திய அரசு சாா்பில் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பங்கேற்றாா்.

இதையொட்டி புதன்கிழமை டாக்கா சென்ற அவா், கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மானைச் சந்தித்து இந்திய மக்களின் இரங்கலைத் தெரிவித்தாா். மேலும், பிரதமா் நரேந்திர மோடி எழுதிய இரங்கல் கடிதத்தையும் அவரிடம் நேரில் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.