/

அமெரிக்கா அல்ல சௌதி அரேபியா! 2025-ல் அதிகமான இந்தியர்களை நாடு கடத்தியது!

அமெரிக்கா அல்ல சௌதி அரேபியாதான், 2025-ல் அதிகமான இந்தியர்களை நாடு கடத்தியிருக்கிறது.

News image
மத்திய அமைச்சர் - ANI
Updated On :27 டிசம்பர் 2025, 4:12 am

இணையதளச் செய்திப் பிரிவு

அமெரிக்காவில் விசா கெடுபிடிகளால், இந்தியர்களின் பணி வாய்ப்பு பறிப்பு, அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் நாடு கடத்தல் என்ற செய்திகள் அதிகம் வெளியான நிலையில், 2025ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டது தொடர்பான தரவுகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

அதன்படி, நாம் கடந்து கொண்டிருக்கும் 2025ஆம் ஆண்டில் சுமார் 81 நாடுகளிலிருந்து 24,600 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்று மாநிலங்களவையில் வெளியுறவு விவகாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், அனைவரும் நினைப்பது போல அமெரிக்காவிலிருந்துதான் அதிகமானோர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டிருப்பர் என்று எண்ணலாம். ஆனால் அது உண்மையில்லை. முதல் இடத்தில் இருப்பது சௌதி அரேபியா.

கடந்த 12 மாதங்களில், சௌதி அரேபியாவிலிருந்துதான் 11,000 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இந்த எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால், அமெரிக்காவிலிருந்து வெறும் 3,800 பேர் அதுவும் சட்டவிரோதமாக நுழைந்தவர்களும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வந்தவர்களும் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

மியான்மர் அடுத்த இடத்தில் இருக்கிறது. இங்கிருந்து 1,591 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். ஆனால், இங்கிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள், வேலை தேடிச் சென்று சைபர் குற்றவாளிகளிடம் அடிமைகளாக சிக்கியிருந்தவர்கள் என்று கூறப்படுகிறதும்.

ஐக்கிய அரபு நாடுகளிலிருந்து நாடு கடத்தப்படக் காரணங்களாக, வேலை விசா இல்லாமல் இருப்பது, விசா காலம் முடிந்துவிட்டது போன்றவை முன்னணியில் உள்ளன. இங்கிருந்து 1,469 பேர் நாடு கடத்தப்பட்டிருக்கிறார்கள்.

இந்த பட்டியலில் மலேசியா, தாய்லாந்து, கம்போடியாவும் உள்ளன. இந்த நாடுகளிலிருந்து வந்தவர்களும் பெரும்பாலும் வேலைதேடிச் சென்று சைபர் குற்றவாளிகளிடம் அடிமைகளாக சிக்கியவர்களே பெரும்பாலானோர் என்று கூறப்படுகிறது.

வெளிநாடுகளில் சிறு வேலைகள் கிடைத்தாலும் செய்துகொள்ளலாம் என்று சௌதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகளுக்குச் செல்வோர், அங்கு போதிய வருமானம் இல்லாமல் அல்லது வேலை கொடுப்பவரின் துன்புறுத்தல் காரணமாக, ஏதேனும் சிறு தவறுகளில் ஈடுபட்டு நாடுகடத்தப்படுவதும் அதிகரித்திருப்பதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.