/

என்ன நடக்கிறது சீனத்தில்? விளக்கம் கேட்கும் உலக சுகாதார நிறுவனம்

சீனத்தின் வடக்குப் பகுதிகளில் பரவி வரும் நுரையீரல் தொற்று நோய் குறித்து விவரங்களை அளிக்குமாறு உலக சுகாதார நிறுவனம் கோரியிருக்கிறது.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:24 am

ENS


பெய்ஜிங்: சீனத்தின் வடக்குப் பகுதிகளில் பரவி வரும் நுரையீரல் தொற்று நோய் குறித்து விவரங்களை அளிக்குமாறு உலக சுகாதார நிறுவனம் கோரியிருக்கிறது.

இந்த நுரையீரல் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள நடவடிக்கைகள் எடுக்குமாறு மக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வடக்கு சீனப் பகுதிகளில், இன்ஃப்ளூயன்ஸா போன்ற வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. அக்டோபர் மாதம் மத்தியில் தொடங்கி தற்போது வரை வேகமாகப் பரவி வருகிறது இந்த காய்ச்சல்.

இதையடுத்து, சீனாவில் பரவி வரும் காய்ச்சல் மற்றும் சிறார்களிடையே பரவி வரும் தொற்று குறித்து விரிவான தகவல்களை அளிக்குமாறு சீனாவுக்கு அதிகாரப்பூர்வ கோரிக்கையை உலக சுகாதார நிறுவனம் வைத்துள்ளது.

சீனாவில் தற்போது குளிர்காலம் நிலவுவதால், அது தொடர்பான வைரஸ் காய்ச்சல் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமைக்குள் அங்கு வெப்பநிலை பூஜ்ஜியம் அளவைத் தொடும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்த ஆண்டு, பருவக்கால நோய்கள் அதிகரித்துக் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், சீனத்தின் வடக்குப் பகுதியில் பள்ளிச் செல்லும் சிறார்களே இதுபோன்ற பிரச்னையால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே கரோனா தொற்றுப் பரவலின்போது, சீனா வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்ளவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் குற்றம்சாட்டியிருந்தது. தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக அது தொடர்பாக காரசார விவாதங்கள் முடிந்துபாடில்லை. இந்த நிலையில், தற்போது புதிய நுரையீரல் பாதிப்பு குறித்து உலக சுகாதார நிறுவனம் விரிவான அறிக்கையை கோரியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.