/

அடுத்தவேளை உணவுக்கே அல்லல்படும் ஆப்கான் பெண்கள்: ஏன் இந்த துயரம்?

தனியாக வாழும் பெண்களும், கணவரை இழந்தவர்களும்  அடுத்த வேளை உணவுக்கே அல்லல்படும் நிலைடி ஏற்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

News image
அடுத்தவேளை உணவுக்கே அல்லல்படும் ஆப்கான் பெண்கள்
Updated On :7 பிப்ரவரி 2024, 6:25 am

PTI

ஆப்கானிஸ்தானில், தலிபான்களின் ஆட்சி வந்தபிறகு, பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள் அதிகரித்து, தனியாக வாழும் பெண்களும், கணவரை இழந்தவர்களும் அடுத்த வேளை உணவுக்கே அல்லல்படும் நிலைடி ஏற்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியது முதல் அங்கு வாழும் மக்கள் அதிக அளவிலான துயரங்களை சந்தித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பெண்களின் கல்வி உரிமை முதல் அனைத்து  சுதந்திரமும் பறிக்கப்பட்டுள்ளது.

ஆப்கனின் ஹெராத் நகரில் வசித்து வரும் ஜமிலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 8 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலைப் படைத் தாக்குதலில் கணவரை இழந்தவர். கண் இழந்த 18 வயது மகள், தற்கொலைப் படைத் தாக்குதலில் கால்களை இழந்த 20 வயது மகனுடன் வசித்து வரும் இவர் வேலைக்கும் செல்ல முடியாமல், வீட்டு வேலைக்குச் சென்றும், வீட்டிலேயே ரொட்டித் தயாரித்துக் கொடுத்தும் கிடைக்கும் சொற்ப பணத்தில் தனது பிள்ளைகளை கவனிக்கும் துயர நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

ஹெராத் பல்கலைக்கழக பேராசிரியர் அகமது (பெயர் மாற்றம்), ஆப்கன் மக்களின் துயர நிலை குறித்து ஆய்வு செய்து வெளிஉலகினர் அறியச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் தகவலில், ஜமிலா வேலை இழந்து, தற்போது சாப்பாட்டுக்கே வழியில்லாமல் வாடகை கொடுக்கவும் முடியாமல், வீட்டை காலி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இதையடுத்து, ஒரு குடும்பத்தினர் தங்களது மாட்டுக் கொட்டகையை அவர்களுக்கு கொடுத்திருப்பதால் அங்கே வசித்து வருகிறார். தற்போது அவருக்கு வருவாயும் இல்லை.

ஆப்கானிஸ்தானில் படித்த பெண்களில் 10 சதவீதம் பேர் சர்வதேச மற்றும் தேசிய நிறுவனங்களில் பணியாற்றி, தனது குடும்பத்தினருக்கு உதவி வந்தனர். அவர்கள் வேலை செய்ய தடை விதிக்கப்பட்டதால், தனியாக வாழும் பெண்களும், கணவரை இழந்தவர்களும் வீட்டு வேலை செய்வது, கழிப்பறையை சுத்தம் செய்வது, துணி துவைத்துக் கொடுப்பது, விவசாயி கூலி வேலைக்குச் செல்வது போன்ற சிறுசிறு வேலைகளுக்குச் சென்று சொற்ப வருவாயை ஈட்டி, அடுத்த வேளை உணவுக்கே அல்லல்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்டில் தலிபான்கள் ஆப்கானிஸ்தானை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதன்பின், ஆப்கானிஸ்தான் மக்களுக்கும் குறிப்பாக பெண்களுக்கும் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. முதலில் பெண்கள் பள்ளிக்குச் செல்வதற்கு தடை விதித்தனர். பொது இடங்களில் பெண்கள் தலை முதல் கால் விரல் வரை மறைத்திருக்கும் வண்ணம் உடையணிய அறிவுறுத்தப்பட்டனர். அதேபோல பூங்காக்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களுக்குச் செல்லவும் பெண்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. 

மேலும் உயர் கல்வி நிலையங்களுக்கு பெண்கள் செல்லவும் தடை விதித்தனர். தலிபான்களின் இந்த செயலுக்கு சர்வதேச அளவில் எதிர்ப்புகள் எழுந்தன. ஆனால் அதனால் ஒருபயனும் ஆப்கன் பெண்களுக்கு இதுவரை கிட்டவில்லை.


தலிபான்களின் இந்தக் கட்டுப்பாடுகளால் ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்முறை, உணவுத் தட்டுப்பாடு மற்றும் மக்களிடையே பாதுகாப்பற்ற உணர்வு போன்றவை உருவாகியுள்ளன. பெண்கள் வேலைக்குச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகிறார்.

மறுபக்கம் பெண் பிள்ளைகள் பள்ளிகளுக்குச் செல்லக் கூடாது என்ற கட்டுப்பாடு, அந்நாட்டு பெண் குழந்தைகளின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிட்டது.

ஆப்கானிஸ்தானில் உள்ள 97 சதவிகித மக்கள் வறுமையில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு அடிப்படை உதவிகள் தேவைப்படுகின்றன. நாட்டில் உள்ள 2 கோடி மக்கள் பசியால் வாடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.