டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

கரோனா கதவுகளைத் திறக்கும் ஐரோப்பா!

உலகிலேயே கரோனா தீநுண்மியின் கோரப் பிடியில் அதிகம் சிக்கியிருப்பது ஐரோப்பிய ஒன்றியம்தான். நோய்த் தொற்று  மற்றும் உயிரிழப்பில் அமெரிக்கா முதலிடத்தில் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக அதிக பாதிப்பை

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:35 pm

எஸ். ராஜாராம்


உலகிலேயே கரோனா தீநுண்மியின் கோரப் பிடியில் அதிகம் சிக்கியிருப்பது ஐரோப்பிய ஒன்றியம்தான். நோய்த் தொற்று  மற்றும் உயிரிழப்பில் அமெரிக்கா முதலிடத்தில் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக அதிக பாதிப்பை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளேசந்தித்திருக்கின்றன. உலக அளவிலான கரோனா தொற்று பாதிப்பில் சரிபாதி ஐரோப்பிய ஒன்றியத்தில் நிகழ்ந்துள்ளது.

மே 2-ஆம் தேதி நிலவரப்படி உலக அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் சுமார் 34 லட்சம். இதில் சுமார் 46 சதவீதம் பேர், அதாவது 15 லட்சம் பேர் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்தவர்கள். உலக அளவில் இறப்பு எண்ணிக்கை 2.39 லட்சம். இதில் சுமார் 63 சதவீதம் பேர், அதாவது 1.40 லட்சம் பேர் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்தவர்கள்.

44 நாடுகள் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் இத்தாலி, பிரிட்டன், ஸ்பெயின், பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய 5 நாடுகள்தாம் அதிக உயிரிழப்பைச் சந்தித்துள்ளன. இவற்றில் பல நாடுகளில் தொற்று விகிதம் தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தாலும், பொருளாதாரத்தைக் கருத்தில்கொண்டு கட்டுப்பாடுகளை தளர்த்த பெரும்பாலான நாடுகள் முடிவெடுத்துள்ளன. ஆனால், இன்னும் கரோனாவின் பிடியில்தான் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான அலுவலகம் எச்சரித்திருக்கிறது. கட்டுப்பாடுகளைத் தளர்த்தினாலும் நோய்த் தொற்று நடவடிக்கைகளை நீண்டகாலத்துக்கு தொடர வேண்டியதன் அவசியத்தையும் அந்நிறுவனம் வலியுறுத்தியிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிக பாதிப்பைச் சந்தித்த நாடுகளும், அவை ஊரடங்கு நடைமுறையை தளர்த்த மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளையும் பார்ப்போம்.

ஸ்பெயின்
நோய்த் தொற்று எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உள்ள நாடு ஸ்பெயின். 2.47 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 25 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மார்ச் மத்தியில் மாட்ரிட், பார்சிலோனாவில் ஆரம்பித்த நோய்த் தொற்று அடுத்தடுத்து 50 மாகாணங்களிலும் பரவியது. உயிரிழப்பும் அபாயகரமான அளவு அதிகரித்து நாட்டையே நிலைகுலையச் செய்தது. மார்ச் 14-ஆம் தேதி ஊரடங்கை அறிவித்த பின்னரும் உயிரிழப்பு தொடர்ந்து, மார்ச் 25-இல் இறப்பு எண்ணிக்கையில் சீனாவை முந்தியது. ஏப்ரல் தொடக்கத்தில் தினமும் சராசரியாக 900 பேர் உயிரிழக்கத் தொடங்கினர். மே 3-ஆம் தேதி 164 பேர் உயிரிழந்தனர். மார்ச் 18-க்கு பிறகு தினசரி உயிரிழப்பில் குறைந்தபட்சம் இதுதான். இதைத் தொடர்ந்து, ஊரடங்கு விதிமுறைகளை ஸ்பெயின் தளர்த்தியுள்ளது. அதன்படி, பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சிறிய தொழிலகங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இத்தாலி
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கரோனாவால் அதிக உயிரிழப்பைச் சந்தித்த நாடு இத்தாலி. 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 28 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். சிறந்த மருத்துவ வசதிகளைக் கொண்ட நாடான இத்தாலி, கரோனா பாதிப்பை சமாளிக்க முடியாமல் திணறியதைப் பார்த்து உலகமே அதிர்ச்சியடைந்தது. மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பியதையடுத்து, நோய் தொற்றியவர்களை அவர்களது வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கும் நிலைக்கு மருத்துவர்கள் தள்ளப்பட்டனர். ஆனால், இந்த முயற்சி பலனளிக்காமல் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தி சிக்கலை அதிகரித்தது.கடுமையான ஊரடங்கு நடைமுறையால் இப்போது பாதிப்பு விகிதம் குறைந்ததையடுத்து முதல் கட்டுப்பாடுகளை இத்தாலி தளர்த்தியுள்ளது. அதன்படி, பொதுமக்கள் வெளியிடங்களுக்குச் செல்லவும், உறவினர்களை சந்திக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆட்டோமொபைல், கட்டுமானத் தொழில்கள் ஏற்கெனவே செயல்படத் தொடங்கிவிட்டன. உணவகங்கள் பார்சல் வசதியுடன் மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், திரையரங்குகள், மதுபானக் கூடங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.

 பிரிட்டன்
பிரிட்டனில்  மொத்தம் 1.82 லட்சம் பேர் நோய்த் தொற்றுக்குள்ளான நிலையில், சுமார் 28 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். கரோனாவை அலட்சியமாக எதிர்கொண்டு அதிக விலை கொடுத்த நாடுகளில் பிரிட்டனும் ஒன்று. உச்சபட்சமாக பிரதமர் போரிஸ் ஜான்சனே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டபோது நாடே அதிர்ந்துபோனது. ஒருவழியாக அவர் குணமாகி மீண்டு வந்திருக்கிறார். இப்போதும் தினசரி பாதிப்பு அதிகமாக இருந்தாலும், ஊரடங்கு நடைமுறைகளைத் தளர்த்துவது குறித்து அந்நாடு ஆலோசித்து வருகிறது. அதற்கான அறிவிப்பு மே 7-ஆம் தேதி வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

பிரான்ஸ்
ஐரோப்பிய ஒன்றியத்தில் பாதிப்பு விகிதத்தில் 4-ஆவது இடத்தில் உள்ளது பிரான்ஸ். 1.68 லட்சம் பேர் நோய்த் தொற்றுக்குள்ளான நிலையில், சுமார் 24 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மே 2-ஆம் தேதி 166 பேர் உயிரிழந்தனர். 5 வாரங்களுக்குப் பிறகு குறைந்தபட்ச உயிரிழப்பு இதுதான். இதையடுத்து, மே 11 முதல் ஊரடங்கை தளர்த்த பிரான்ஸ் முடிவு செய்துள்ளது. அதன்படி, பள்ளிகள், சில தொழிலகங்கள் திறக்கப்படும். பொதுமக்கள் 100 கி.மீ. வரை பயணம் செய்துகொள்ளலாம். ஆனால், நோய் பாதிப்பு அதிகமுள்ள பாரீஸ் மற்றும் வடகிழக்கு பிராந்தியத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது மெதுவாக அமல்படுத்தப்படும்.

பெல்ஜியம்
உலகிலேயே கரோனா இறப்பு விகிதத்தில் அதிகமாக உள்ள நாடு பெல்ஜியம். 49 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், சுமார் 7800 பேர் உயிரிழந்துள்ளனர். 1.15 கோடி மக்கள்தொகை கொண்ட இந்நாட்டில் இந்த இறப்பு விகிதத்தின்படி பார்த்தால், ஒரு லட்சத்துக்கு 66 பேர் என்கிற விகிதத்தில் உயிரிழப்பு உள்ளது. ஆனால், மருத்துவமனைகள் மட்டுமன்றி "ஹோம் ஹேர்' எனப்படும் மையங்களிலும் இறப்பு எண்ணிக்கையை கணக்கிட்டுள்ளதாகவும், ஹோம் ஹேரில் இறந்தவர்கள் அனைவருக்கும் கரோனா தொற்றுதான் என்பது உறுதி செய்யப்படவில்லை என்றும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மார்ச் 18 முதல் ஊரடங்கை நடைமுறைப்படுத்தியுள்ள பெல்ஜியம், மே 11 முதல் அதில் தளர்வுகளை அறிவித்து நான்கு கட்டங்களாகச் செயல்படுத்தவுள்ளது. அதன்படி, பொதுமக்கள் வீட்டைவிட்டு முகக்கவசத்துடன் வெளியே செல்ல அனுமதி. மே 18 முதல் பள்ளிகள் திறக்கப்படும். இருவர் மட்டுமே விளையாடும் விளையாட்டுகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.