இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் நவாஸ் ஷெரிப் மீது தேசத் துரோக வழக்குத் தொடரக் கோரி வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த மனுவினை, லாகூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ஆம் தேதி மும்பையில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா தாக்குதல் நடத்தியது. இதில் 166 பேர் கொல்லப்பட்டனர், 600-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதில் உயிருடன் பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப், கடந்த 2012-ஆம் ஆண்டு புணேவில் அமைந்துள்ள யெரவாடா மத்திய சிறையில் தூக்கிலிடப்பட்டான். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஜமாத்-உத்-தவாத் அமைப்பின் தலைவன் ஹஃபீஸ் சயீது முளையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவில் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள ஹஃபீஸ் சயீது, பாகிஸ்தானில் அரசியல் கட்சி நடத்தி வருகிறான். மேலும் இந்த வழக்கு தொடர்பாக அவனை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு மத்திய அரசு பலமுறை கோரிக்கை வைத்தும் அதை பாகிஸ்தான் அரசு நிராகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணை பாகிஸ்தான் நீதிமன்றத்தில் இன்னும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் நவாஸ் ஷெரீப் சமீபத்தில் பாகிஸ்தானிலிருந்து வெளிவரும் 'டான்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்புகள் முழு சுதந்திரத்துடன் செயல்பட்டு வருகிறது. அவர்களை போராளிகள் என்று அழைக்கும் நாம், எல்லை தாண்டிச் சென்று மும்பையில் 150-க்கும் மேற்பட்டவர்களை கொல்ல அனுமதிக்க வேண்டுமா? இதற்கான விளக்கத்தை எனக்கு அளியுங்கள். இதுதொடர்பான வழக்கு விசாரணை இன்னும் ஏன் முடிக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
அவரது இந்த கருத்து பாகிஸ்தானில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், அமைப்புகளும் அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் அவர் தெரிவித்த கருத்துக்களுக்காக நவாஸ் ஷெரிப் மீது தேசத் துரோக வழக்குத் தொடரக் கோரி இரு வேறு மனுக்கள் லாகூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அப்தாப் விர்க் மற்றும் பாகிஸ்தான் அவாமி தெஹ்ரீக் என்னும் அரசியல் கட்சியின் தலைவரான குர்ரம் நவாஸ் கண்டபுர் ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்தனர்.
அவர்களது மனுவில் நவாஸ் ஷெரிபின் கருத்துக்கள் தேச பாதுகாப்புக்கும் அரசு அமைப்புகளுக்கும் எதிரானது. இது தேசத்திற்கு துரோகம் செய்வது போன்றது என்பதால், அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிய உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்கள். பிராந்திய உள்விவகாரத் துறை அமைச்சரான அசன் இக்பாலும் இவ்வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வியாழனன்று நவாஸ் ஷெரிப் மீது தேசத் துரோக வழக்குத் தொடரக் கோரி வழக்கறிஞர் அப்தாப் விர்க் தாக்கல் செய்த மனுவினை, 'ஏற்கத்தக்கதல்ல' என்று கூறி லாகூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெள்ளிச்சுடரே.... இரண்டு வானம் முதல் பாடல்!

குடும்பக் கதையில் நடிக்கும் கவின்!

அயோத்தி இயக்குநர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி!

தில்லியில் பெண் வழக்கறிஞருக்கு கத்திக்குத்து: கணவர் தலைமறைவு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


