/

எகிப்து பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 200-ஆக உயர்வு

எகிப்தில் உள்ள மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200-ஆக உயர்ந்தது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:12 pm

Raghavendran

எகிப்தின் வடக்கு சினாய் பகுதியில் அமைந்துள்ள பிர் அல்-அப்த் என்ற மசூதியில் வெள்ளிக்கிழமை பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நடந்தது.

மதிய நேர தொழுகையின் போது நடத்தப்பட்ட இந்த பயங்கரவாத குண்டு வெடிப்பு சம்பவத்தில் அங்கு கூடியிருந்த 200 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர்.

மசூதியில் திடீரென நடந்த குண்டுவெடிப்புக்கு பின்னர் அங்கு மேற்கொண்டு வாகனங்களில் வந்த பயங்கரவாதிகள் அங்கிருந்தவர்கள் மீது தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாகச் சுடத் தொடங்கினர். 

இதனால் குண்டுவெடிப்பில் இருந்து தப்பித்த மேலும் பலர் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது.

எகிப்து பாதுகாப்புப் படையினைச் சேர்ந்த பெரும்பாலானோரின் குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்கள் அந்த மசூதியில் தொழுகை நடத்த கூடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த பாதுகாப்புப் படையினர், காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்தனர்.

இதில், 50-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் வரை பயன்படுத்தப்பட்டது. இருப்பினும் இந்த கோர தாக்குதல் காரணமாக மேலும் பலர் உயிரிழக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், இது ஐ.எஸ். அமைப்பின் சதிச் செயலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.