/

அருள் மழை பொழியும் ஆதிபீடா பரமேசுவரி

News image
Updated On :7 ஜூன் 2024, 11:12 am

கி.ஸ்ரீதரன்

கோயில் நகரான காஞ்சிபுரத்தில் சக்தி வழிபாடு சிறப்பாக நடைபெறும் கோயில்களில் ஒன்று "ஆதிகாமாட்சி அம்மன்' என போற்றப்படும் "ஆதிபீடா பரமேசுவரி காளிகாம்பாள் கோயில்' ஆகும். காமாட்சி கோயிலுக்கும், குமரக் கோட்டத்துக்கும் இடையே இந்தக் கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயிலின் நுழைவுவாயிலில் ஐந்து நிலை கோபுரம் கம்பீரமாக உள்ளது. கோபுரத்துக்கு முன்புறம் பலிபீடமும் கொடிமரமும் அமைந்துள்ளன. அருகே ஊஞ்சல் மண்டபம் அமைந்துள்ளது. கருவறையில் அம்பாள் பத்மாசனத்தில் தென் திசையை நோக்கி அமர்ந்த கோலத்தில் தனது மேலிரு கரங்களில் அங்குசம், பாசத்தைத் தாங்கியும் கீழிரு கரங்களில் அருள் வழங்கும் அபய முத்திரையைத் தாங்கியும், இடது கரத்தில் கபாலம், அட்சய பாத்திரத்தைத் தாங்கி அருள் மழை பொழியும் அற்புத வடிவுடன் காட்சி அளிக்கின்றார்.

அம்பாளின் தலை அலங்காரம் ஜடா மகுடமாக விளங்குகிறது. ஜடா மகுடத்தில் சந்திர பிரபை அழகாக அலங்கரிக்கிறது. அம்பாளின் காலின் கீழே மூன்று அசுரர்களின் தலைப்

பகுதி மட்டும் காணப்படுகிறது. கருவறை முகப்பில் உள்ள ஸ்ரீசக்கர இயந்திரத்துக்கு சிறப்பாக வழிபாடுகள் நாள்தோறும் நடைபெறுகின்றன. கருவறை வாயிலில் துவாரபாலகிகளின் வடிவங்கள் காட்சியளிக்கின்றன. அம்பாள் கருவறை தேவகோட்டங்களில் நர்த்தன கணபதி, மகேஸ்வரி, வைஷ்ணவி, பிராமி, துர்க்கை இறைவ வடிவங்கள் அமைந்துள்ளன.

அசுரர்களால் தேவர்களுக்கு தொல்லை ஏற்படவே தேவி காளியாக உருவம் எடுத்து, அவர்களை வதம் செய்தாள். எனவே, இத்தலம் "காளிக்கோட்டம்' எனவும் அழைக்கப்படுகிறது. சிறப்பாக வழிபடப் பெறும் 51 சக்தி பீடங்

களில் ஒட்டியான பீடமாகவும் "ஐ' கார அட்சர பீடமாகவும் இத்தலம் வணங்கப்படுகிறது.

பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் கருணைக்கண் கொண்டவள் என்பதால் "காமாட்சி" என அழைக்கப்பட்டாள். அசுரர்களை அழித்தவுடன் அம்பாள் உக்கிரமாக இருந்தாள். ஆதிசங்கரர் ஸ்ரீ சக்கரத்துக்கு புணருத்தாரணம் செய்து அம்பிகையை சாந்தப்படுத்தியதாக சிறப்புடன் கூறப்படுகிறது.

கோயிலில் எழுந்தருளி அருள்புரியும் விநாயகர், சுப்பிரமணியர், பைரவர், அன்னபூரணி, நாகர், சப்த கன்னியர் ஆகிய தெய்வ வடிவங்களை கண்டு வழிபடலாம்.

இக்கோயில் விசுவகர்மா சமுதாயத்தினரால் சிறப்பாகப் போற்றப்படுகிறது. கோயில் வளாகத்தில் ஸ்ரீ விஸ்வகர்மா, ஸ்ரீ காயத்ரி, ஸ்ரீ ஆதிசங்கரர் ஆகிய மூன்று தெய்வ வடிவங்களும் தனித்தனி சந்நிதிகளும் அமைய உள்ளன.

கோயிலில் சிவலிங்கத்தில் பானம் எனப்படும் ருத்ர பாகத்தில் இறைவியின் அமர்ந்த கோலமும் காணப்படுவது சிறப்பாகும். இறைவி தனது கரங்களில் உடுக்கை சூலம், பாசம், கபாலம் தாங்கி காட்சி

யளிக்கிறாள். எந்தக் கோயிலிலும் காணக் கிடைக்காத இந்த வடிவை "சக்திலிங்கம்' என அழைக்கின்றனர்.

உற்சவ அம்பிகையுடன் சரஸ்வதி, மகாலட்சுமியும் எழுந்தருளி அருள்புரிவதால், கல்வி கலைகளில் சிறக்கவும், செல்வ வளம் பெறவும் பக்தர்களுக்கு வழிவகை செய்யும் என்பது ஐதீகம்.

வழிபாடு சிறப்புமிக்க இந்தக் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறையின் வழிகாட்டுதலின்படி திருப்பணிகள் நடைபெற்றுள்ளன. ஜூன் 12}இல் குடமுழுக்கு நடைபெறவுள்ளது.

தொல்லியல் துறை (பணி நிறைவு)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.