/

51 சக்தி பீடம்: பங்களாதேஷ் சுநந்தா

பங்களாதேஷில் உள்ள சுநந்தா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது சுநந்தா தேவியின் ஆலயம். சக்தி பீட வரிசையில் 48வது பீடமாக விளங்கும் இது, அன்னையின் உடற்கூறுகளில் நாசி விழுந்த இடமாகக்  கருதப்படுகிறது.

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:04 am

அ.கு. பார்வதி

பங்களாதேஷில் உள்ள சுநந்தா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது சுநந்தா தேவியின் ஆலயம். சக்தி பீட வரிசையில் 48வது பீடமாக விளங்கும் இது, அன்னையின் உடற்கூறுகளில் நாசி விழுந்த இடமாகக்  கருதப்படுகிறது.

இந்த மகாசக்தி பீடேஸ்வரியின் திருநாமம் சுநந்தா. காவல் தெய்வமாக விளங்கும் இறைவன் த்ரியம்பக். இங்குள்ள கோயிலை மக்கள் உக்ரமாதா ஆலயம் என்கின்றனர். தலத்தின் பெயர் பூரணாகிரி என்பது.

மிக அரிதாகப் போற்றப்படும் நான்கு மகாசக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. இந்த ஆலயத்தை அடைவது அவ்வளவு எளிது அல்ல. ஹவுரா - பன்காவுங் - ஜெஸ்ஸýர் - குல்னா - பாரிஸôல் வழியாக  ரயிலில் சென்று, பிறகு ஷிகாபூர் வரை பேருந்து மூலம் பயணம் செய்து இத்தலத்தை அடையலாம்.

நாசி விழுந்த இடமான மலையுச்சியில் சதுரமான ஒரு மேடையும் அதில் லிங்கம் ஒன்றும் உள்ளது. இந்த லிங்கம் மிகப் பழைமையானது. இதுவே அம்பாள் உருவமாக எண்ணப்படுகிறது. மேடைக்குச்  சற்று மேற்கே குட்டை போன்று ஓர் இடம் தென்படுகிறது. அதிலிருந்து ஊற்றுப் போல் பெருகிவரும் நீர், ஓடையாக மாறி சற்றுத் தொலைவு சென்றதும் மறைந்து விடுகிறதாம். இந்த நீர் மிகவும்  புனிதமாகக் கருதப்படுகிறது. இந்நீரை மக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி யாரேனும் இந்த நீரைப் பயன்படுத்தினால், தண்ணீர் ஊற்று உடனே நின்று விடுகிறதாம் . ஊற்று மீண்டும்  வருவதற்குப் பல மாதங்கள் ஆகிறதாம்.

அங்குள்ள லிங்கத்தின் மேல் செந்தூரம் கனமாகப் பூசப்பட்டுள்ளதால், அது, அன்னை பராசக்தியின் ரூபம் போல் மிளிர்கிறது. இந்தப் புனித பீடத்துக்கு மிக அருகிலேயே பல கிளைகளாக விரிந்த மரம்  உள்ளது. இதில் இலை, பூ, காய், கனி எதுவுமே கிடையாது. பட்டுப்போன மரம் போல காட்சி அளிக்கும் இதில், இலைகளுக்கு பதிலாக பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியதற்காகக் கட்டிய  வெண்கல மணிகளே காட்சி தருகின்றன. இந்த மரம் பல ஆண்டுகளாகியும், இப்படியே உறுதியாகக் காட்சியளிக்கிறது.

சிறப்பு வாய்ந்த சுநந்தா தேவியின் ஆலயம்தான் அன்னையின் நாசி விழுந்த இடமாகக் கருதப்படுகிறது. நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் வசந்த நவராத்திரியின் போது  இவ்வாலயத்தில் ஒன்பது நாட்களும், சிறப்பான பூஜைகள் நடைபெறுகின்றன. நூற்றுக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு தேவியின் அருள் பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.