ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கருணையின்வடிவம் காரத்தொழு அழகு நாச்சியம்மன்

கொங்கு நாட்டில் பாய்ந்து வளப்படுத்தும் வரலாற்றுப் புகழ் பெற்ற அமராவதி ஆற்றின் கரையில் வழிபாடு சிறப்பு மிக்க பல திருக்கோயில்கள் அமைந்துள்ளன.

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:11 pm

கி.ஸ்ரீதரன்

கொங்கு நாட்டில் பாய்ந்து வளப்படுத்தும் வரலாற்றுப் புகழ் பெற்ற அமராவதி ஆற்றின் கரையில் வழிபாடு சிறப்பு மிக்க பல திருக்கோயில்கள் அமைந்துள்ளன. "க' என்ற எழுத்துடன் துவங்குகிறது என்ற சிறப்புடன், க - கிராமங்கள் என அழைக்கப்படும் கொழுமம், குமரலிங்கம், கணியூர், கடத்தூர், காரத்தொழு உள்ளிட்ட ஊர்களில் சிறப்பு மிக்க திருக்கோயில்கள் வழிபாட்டில் இருக்கின்றன.

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டத்தில் உள்ள காரத்தொழு என்னும் ஊரில் உள்ள அழகு நாச்சியம்மன் திருக்கோயில் இப்பகுதி மக்களால் சிறப்பாகப் போற்றி வணங்கப்படுகிறது. பழனியிலிருந்து மடத்துக்குளம் - கணியூர் வழியாக 25 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. தாராபுரம் -உடுமலை சாலையில் சுமார் 20 கி.மீ. தொலைவில் நெடுஞ்சாலை அருகே உள்ளது. நகரப் பேருந்துகள் கோயில் அருகிலேயே நின்று செல்கின்றன.

வடக்கு நோக்கிய திருக்கோயில். கருவறையில் தேவி அழகு நாச்சியம்மன் எட்டு கரங்களுடன் அழகிய தோற்றத்துடன் வடக்கு நோக்கி அமர்ந்து பக்தர்களின் துன்பங்களைப் போக்குகிறாள். தீமையின் வடிவமான அசுரன் காலின் கீழே கிடக்கிறான்.கையில் சூலம் தாங்கி அழிக்கும் அற்புதக் கோலத்தை இங்கே கண்டு தரிசிக்கலாம்.

திருக்கோயில் நுழைவு வாயிலின் மேற்புறம் தேவியின் சுதை வடிவங்கள் அழகாகக் காட்சியளிக்கின்றன. நுழைவு வாயிலைக் கடந்தவுடன் இடது புறம் சுதையால் ஆன குதிரைகள் கம்பீரமாகக் காட்சி தருகின்றன. காவல் தெய்வமாக தேவி விளங்குவதால் குதிரைகள் இங்கே அமைந்துள்ளன. அருகிலேயே அம்பாளின் பூத வாகனமும், சுதை உருவமாக அமைந்துள்ளது.

கோயிலின் திருச்சுற்றில் நான்கு பக்கங்களிலும் அம்பாளுக்கு உகந்த வேப்பமரங்கள் குளிர்ந்த நிழலைத் தருகின்றன.

பௌர்ணமி, அமாவாசை, வெள்ளிக் கிழமைகளில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. குறிப்பாக ஆடி மாத வெள்ளிக் கிழமைகள் மற்றும் நவராத்திரி விழா நாட்கள் சிறப்பானவை.

சிரசுப்பூ பிரார்த்தனை: இக்கோயிலில் சிறப்பு பிரார்த்தனை வழிபாடு நடைபெற்று வருகிறது. திங்கள், செவ்வாய், புதன், வியாழக் கிழமைகளில் "சிரசுப்பூ' என்ற வழிபாடு காலை 6.30 முதல் 8 மணி வரை நடைபெறுகிறது. தேவியின் சிரசின் (தலை) மீது உதிரிப்பூக்களை பக்தர்களின் வேண்டுதலின்படி பூசாரிகள் வைக்கின்றனர். அரளிப்பூ சிறந்ததாகக் கருதப்படுகிறது. தேவியின் வலப்புறம் பூக்கள் விழுந்தால் வேண்டிய - நினைத்த செயலுக்கு உத்தரவு கிடைத்ததாகவும், நிச்சயம் நிறைவேறும் என்றும் மக்கள் கருதுகின்றனர். தேவியின் இடப்புறம்பூக்கள் விழுந்தால் வேண்டியது நிறைவேறுவதற்கு சற்று கால தாமதம் ஆகும் என்கின்றனர். "சிரசுப்பூ' என்ற இவ்வேண்டுதல் பிரார்த்தனை வழிபாடு இகோயிலின் தனிச் சிறப்பு. இதற்கு கட்டணம் ஏதுமில்லை.

நடை திறந்திருக்கும் நேரம்: 6-1, 3-8.

தகவலுக்கு: 04252 - 224755.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.