/

சக்தி பீட நாயகி ஸ்ரீவைஷ்ணவி!

தட்சன் மாபெரும் வேள்வி ஒன்றை நடத்தினான். அந்த யாகத்துக்கு உரிய அவிர்பாகம் பெற்றுக் கொள்ள சிவபெருமானை அழைக்காமல் அவமதித்தான் தட்சன்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 9:36 am

அ.கு. பார்வதி

தட்சன் மாபெரும் வேள்வி ஒன்றை நடத்தினான். அந்த யாகத்துக்கு உரிய அவிர்பாகம் பெற்றுக் கொள்ள சிவபெருமானை அழைக்காமல் அவமதித்தான் தட்சன். தன் பதியை தந்தையே அவமதித்ததால் கோபமுற்று நியாயம் கேட்கச் சென்றாள் தாட்சாயிணி. அவளும் அவம ரியாதை அடைந்தாள். இதனால் சிவபெருமான் கடும் கோபம் கொண்டார்.

சிவனாரின் சினத்திலிருந்து வீரபத்திரரும், தாட்சாயிணியின் கோபத்திலிருந்து காளியும் தோன்றி யாகத்தையும் தட்சனையும் அழித்தார்கள். இருப்பினும் சிவபெருமானை அவமதித்த தட்சனின் மகளாக இருக்க விரும்பாத அன்னை தாட்சாயிணி, தீக்குள் பாய்ந்தாள். சிவபெருமானின் நிலையுணர்ந்த ஸ்ரீமகாவிஷ்ணு தனது சுதர்சன சக்கரத்தின் மூலம், தாட்சாயிணியின் கருகிய உடலை 51 கூறுகளாகச் சிதைத்தார். அவ்வாறு சிதறிய 51 கூறுகள் விழுந்த இடங்கள் சக்தி பீடங்கள் ஆயின என்பது புராணம். இவ்வாறு, அன்னை உடலின் ஐம்பத்து ஒன்றாவது கூறு விழுந்த இடமே அம்பத்தூர் என்று மருவி அழைக்கப்படுகிறது என்கிறார்கள்.

இவ்வாறு ஒரு சக்தி பீடமாகத் திகழும் வண்ணம், அம்பத்தூரை அடுத்த திருமுல்லைவாயில் அருகே அன்னை வைஷ்ணவிக்கு ஒரு கோயில் அமைந்திருக்கிறது. இங்கே தனி சந்நிதியில் நின்ற கோலத்தில் அருளைப் பொழிந்தபடி அன்னை விளங்குகிறாள். இங்கே தேவ சேனாபதியான சக்திவேலன், ஆனைமுகன், ஆஞ்சநேயர், ஸ்ரீமாஹேஸ்வரி, ஸ்ரீநாராயணீ ஆகியோரின் திருவுருவங்கள் சிறப்பாக உள்ளன.

கருவறை அருகே ஸ்ரீரமண மகரிஷியின் உருவப் படம் உள்ளது. ஒருநாள் ஆலயத் திருப்பணியை நடத்தி வந்த ஒரு பக்தரின் கனவில் தொடர்ந்து பகவான் ஸ்ரீரமணரின் படத்துக்கு அருகில் ஒரு நாகம் படமெடுத்து மறைவதாகத் தெரிந்தது. ஸ்ரீரமணர் மனித உருவில் இந்த மண்ணுலகில் தோன்றியவர் என்றாலும், சிவபெருமானின் அம்சமாகத் திகழ்ந்தவர். அவர் படம் முன்பு நாகம் படமெடுத்து மறைந்தது என்றால் சிவசக்தி ஐக்கியத்தினை உணர்த்தவே ஸ்ரீவைஷ்ணவி நாக வடிவில் தோன்றினாளாம். அதனால் தட்சிணாமூர்த்திக்கு தனி சந்நிதி அமைக்கப்பட்டது. அப்போது, புராதன தட்சிணாமூர்த்தி விக்ரஹமும் கிடைத்ததாம். அடுத்து தல விருட்சமாகத் திகழும் மகிழ மரத்தடியில் சிறு ஆலயம் அமைக்கப்பட்டது. மாசி மாதத்தில் தட்சிணாமூர்த்தி சந்நிதிக்கு மஹாகும்பாபிஷேகமும் நடந்தது. இடப நந்தியுடன் வீற்றிருக்கும் இம்முர்த்தி போன்ற திருவுருவம் மிகவும் அரிது என்பர்.

இவ்வாறு, சக்தி பீட நாயகி ஸ்ரீவைஷ்ணவி நாக உருவெடுத்து ஸ்ரீரமணரின் படத்துக்கு அருகில் தோன்றி மறைந்ததால் தட்சிணாமூர்த்தியின் ஆலயம் அமைந்ததாம். இந்த வைஷ்ணவி தேவியைத்தான் வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகளும் திருப்புகழ் பாராயணம் செய்து ஆவாஹனம் செய்தாராம்.

சென்னை அம்பத்தூரில் இருந்து ஆவடி செல்லும் சாலையில் திருமுல்லைவாயிலை அடுத்து உள்ளது இந்த அழகிய ஆலயம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.