/

மனித நேயத்தைக் காப்போம்!

முதல் கலீபா அபூபக்கருக்கு பின் ஆட்சிப் பொறுப்பேற்ற உமர் (ரலி) அவர்கள் மனித நேயம் பேணி மாற்று சமுதாயத்தினரையும் மதித்து நடந்து எதிர்கால சமய ஒற்றுமைக்கு வித்திட்டார். ஜெரூசலம் வென்ற கலீபா உமர்(ரலி) அவர்

News image
Updated On :2 ஜனவரி 2024, 6:53 pm

மு. அ. அபுல் அமீன்

முதல் கலீபா அபூபக்கருக்கு பின் ஆட்சிப் பொறுப்பேற்ற உமர் (ரலி) அவர்கள் மனித நேயம் பேணி மாற்று சமுதாயத்தினரையும் மதித்து நடந்து எதிர்கால சமய ஒற்றுமைக்கு வித்திட்டார்.

ஜெரூசலம் வென்ற கலீபா உமர்(ரலி) அவர்கள் ஜெரூசலம் சென்றார்கள். நீண்ட பயணத்தில் கலீபா தான் மட்டும் குதிரையில் அமர்ந்து பயணிக்க குதிரை ஓட்டி தொடர்ந்து நடந்து வருவதை விரும்பவில்லை. குறிப்பிட்ட தூரம் கலீபா அமர்ந்து வர, பின்னர் அதேதூரம் குதிரை ஓட்டி அமர்ந்து வர கலீபா நடந்து சென்றார்கள்.

ஜெரூசலத்தை நெருங்கும் நேரத்தில் குதிரை ஓட்டி குதிரையில் அமர்ந்திருந்தார். கலீபா குதிரையின் கயிற்றைப் பிடித்து நடந்து வந்தார்கள். வரவேற்கக் கூடியிருந்த கிறித்தவ குருமார்கள் யார் கலீபா? யார் குதிரை ஓட்டி? என்று அறியாது திகைத்தனர். கலீபாவின் எளிய உடையும் கலீபாவை அடையாளம் காண முடியாமல் குருமார்களை குழப்பியது.

கலீபா உமர் (ரலி) அவர்களின் எளிமையையும் எல்லாரையும் ஏற்றத் தாழ்வின்றி சமமாய் மதித்து நடக்கும் மனித நேயத்தையும் கண்டு நெகிழ்ந்தனர் குரு மார்கள்.

குருமார்கள் ஜெரூசலம் நகரைச் சுற்றிக் காட்டினர். கிறித்தவ ஆலயங்களுக்கும் அழைத்து சென்றனர். கஸýதத்துல் கியாமா என்ற தவ மடத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபொழுது மதிய தொழுகை (லுஹர்) நேரம் நெருங்கிவிட்டது. கிறித்தவ குருமார்கள் அங்கேயே தொழ அனுமதித்தனர். உமர்(ரலி) அவர்கள் அங்கே தொழவில்லை. அங்கே அவர்கள் தொழுதால் அவ்விடத்தை இஸ்லாமியர்கள் உரிமை கோருவர் என்று அங்கே தொழ மறுத்து மடத்திற்கு வெளியில் வந்து வேறிடத்தில் தொழுதார்கள். அவ்விடத்தில் பின்னர், முஸ்லீம்கள் தொழுவதோ, தொழுகை பள்ளி அமைப்பதோ கூடாது என்று எழுதி அந்த குருமார்களிடம் கொடுத்தார்.

ஜெரூசலத்தில் வாழ்ந்த முஸ்லீம்கள் அம்மடத்திற்கு வெகு தொலைவில் குருமார்கள் காட்டிய சக்ரா என்ற இடத்தில் தொழுவதற்கு பள்ளிவாசல் கட்டினார்கள். அப்பள்ளி மஸ்ஜிதுல் உமர் என்று பெயர் பெற்றது.

உமர் (ரலி) அவர்களின் மனித நேயத்தையும் சமயப் பொறுமையையும் நாமும் கடைப்பிடித்து இந்திய ஒற்றுமையைக் காப்போம். ஒருமைப்பாட்டை ஓங்கச் செய்வோம்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.