/

கார்த்திகை சோமவாரச் சிறப்பு!

தன்னுடைய கொடிய நோய் குணமாக சிவபெருமானை ஆராதனை செய்து, நவக்கிரகங்களில் ஒருவராகத் திகழும் பேறு பெற்றான்.

News image
Updated On :2 ஜனவரி 2024, 7:45 pm

அ.கு. பார்வதி

சோமன் என்றால் சந்திரன் என்று பொருள். பார்வதியுடன் கூடிய சிவபெருமான் என்றும் கூறுவர். சந்திரன், கார்த்திகை மாதம் சுக்லபட்ச அஷ்டமியில் தோன்றினான். தன்னுடைய கொடிய நோய் குணமாக சிவபெருமானை ஆராதனை செய்து, நவக்கிரகங்களில் ஒருவராகத் திகழும் பேறு பெற்றான். அவனது பெயரால் தோன்றியதுதான் சோமவார விரதம்.
 அதுவும் சந்திரன் தோன்றிய இந்தக் கார்த்திகை மாத சோமவாரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்நாளில் சிவத்தலங்களில் சங்காபிஷேகங்கள் நடைபெறுகின்றன.
 திங்கள் கிழமையான இந்த நாளில், சோமனாகிய சந்திரன் தன் பெயரால் இந்த விரதம் புகழ்பெற வேண்டும் என சிவபெருமானைப் பிரார்த்தித்தான். பெருமான் வரமருள, இந்த விரதம் சோமவார விரதமாக சிறப்பு பெற்றது.
 தட்சனின் மருமகன்தான் சந்திரன். தட்சனின் இருபத்தியேழு பெண்களையும் மணந்து கொண்டான் சந்திரன். தட்சனோ தனது அனைத்துப் பெண்களையும் சமமாக நடத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். ஆனால் அதை மீறி ரோகிணியுடன் மட்டும் சந்திரன் அன்பாக இருந்தான். எனவே மற்ற 26 பேரும் தட்சனிடம் முறையிட, கோபமுற்ற தட்சன் சந்திரன் தேயக்கடவது என்று சாபம் கொடுத்தான். அதனால் தேய்ந்து கொண்டே வந்த சந்திரன் சிவபெருமானைத் தஞ்சமடைந்தான். அவர் சந்திரனைத் தன் திருமுடியில் தாங்கி சோமநாதர் ஆனார். சந்திரசூடராக, சந்திரமெüலீஸ்வரராக ஆனார்.
 இவ்வாறு சிவபெருமான் திருமுடியில் சந்திரன் அமர்ந்ததும் இந்தக் கார்த்திகை சோமவாரத்தில்தான்.
 சந்திரன் சிவபெருமானிடம் ""14 ஆண்டுகள் சோமவாரம் தோறும் பூஜை செய்து, இரவு கண் விழித்து சிவபுராணம் படித்து காலையில் ஹோமம் செய்து, கலச நீரால் அபிஷேகம் செய்து கணவனும் மனைவியுமாக பூஜை செய்பவர்களுக்கு நற்கதி அருள வேண்டும்'' என்று வேண்டினான்.
 எனவே, சோமவார விரதம் இருப்பவர்களின் பாவங்களைப் போக்கி, பகைவர் பயம் அகற்றி, அவர்களை நற்கதி அடையச் செய்வார் சிவபெருமான்.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.