உண்மையான பட்டாபிஷேகம்!
திருவையாறு திருத்தலத்தில், காவிரியின் தென்கரையில், புது அக்ரஹாரத்தில் வீற்றிருந்து அருள்புரியும் பட்டாபிஷேக ராம அர்ச்சாவதாரங்கள் (விக்ரஹங்கள்), மிகவும் "சாந்நித்யம்' வாய்ந்தவை. விக்ரஹங்கள், உத்தமமான ப


திருவையாறு திருத்தலத்தில், காவிரியின் தென்கரையில், புது அக்ரஹாரத்தில் வீற்றிருந்து அருள்புரியும் பட்டாபிஷேக ராம அர்ச்சாவதாரங்கள் (விக்ரஹங்கள்), மிகவும் "சாந்நித்யம்' வாய்ந்தவை. விக்ரஹங்கள், உத்தமமான பக்தர்களால் "மங்களா சாஸனம்' (பாடப் பெறுதல்) செய்யப்படும்போது அவற்றின் தெய்வீக ஆற்றல் பன் மடங்கு கூடுகிறது என்பது பெரியோர் வாக்கு. அந்த வகையில் ஐயாறு பட்டாபிஷேக ராம அர்ச்சாவதாரங்கள் இரண்டு விதங்களில் சிறப்பு பெற்றவை. ஆம், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாக பிரும்மத்தினால் போற்றப்பட்டவர் இந்த ராம பிரான். அது மட்டுமின்றி, முத்துசுவாமி தீட்சிதராலும் பாடல் பெற்றவர்.
தஞ்சையில் வசித்தபோது தீட்சிதர், திருவையாறு சென்று ஐயாறப்பரையும், தர்மசவர்த்தினியையும் அவ்வப்போது பாடியிருக்கிறார். அப்படி விஜயம் செய்த தருணங்களில் தியாகராஜரை அவர் சந்திக்கும் ஒரு தருணம் வாய்த்தது.
தியாகராஜரின் விருப்பத்திற்கு இணங்க ""மாமவ பட்டாபிராம' என்ற மணிரங்கு ராகத்தில் அமைந்த கிருதியை தீட்சிதர், பட்டாபிஷேக ராமரை எண்ணி உள்ளம் உருகப் பாடினார். இந்த பட்டாபிஷேக ராமர், திருவையாற்றில் அம்மன் கோயிலில் வைக்கப்பட்டு வழிபாட்டில் இருந்ததாகவும், தஞ்சை அரச பரம்பரையில் தோன்றிய ராணி மோகனாம்பாள் என்பவர், காவிரியின் தென் கரையில் புது அக்ரஹாரம் அமைத்து, இந்த பட்டாபிஷேக ராமனை ஒரு சிறிய ஆலயத்தில் பிரதிஷ்டை செய்ததாகவும் வரலாற்றுச் செய்தி கூறுகிறது.
திருவையாற்றில் தியாக பிரும்மம் வசித்து வந்த சமயத்தில் தினமும் இந்த ராமரை தரிசிப்பார். பின்னர் அதே நினைவோடு ஐயாறப்பர் ஆலயம் சென்று பல கீர்த்தனைகளை பஞ்சநதீஸ்வரர் சந்நிதியிலும், தர்ம வர்த்தினி அம்மன் சந்நிதியிலும் பாடியுள்ளதாகத் தெரிய வருகிறது. தன்னுடைய சந்நிதியில் "ராம கானம்' பண்ணுவதை "பக்த வத்ஸலரான' பஞ்சநதீஸ்வரர் உகந்து கேட்டிருப்பார் என்பதில் ஐயம் இல்லை.
இந்த பட்டாபிஷேக ராமர் சீதா பிராட்டியுடனும், லட்சுமண, பரத, சத்ருக்னாதிகள், ஆஞ்சநேயருடனும், வால்மீகி மகரிஷி ராமாயண காவியத்தில் விவரித்தபடி அழகுறக் காட்சியளிக்கிறார். வால்மீகி தனது ஸ்லோகங்கள் மூலம் ராமபிரானுக்கு மகுடாபிஷேகம் செய்தார் என்றால், தீட்சிதர் தனது கிருதி (பாடல்)யின் மூலம் பெருமானை அரியாசனத்தில் அமர்த்தி அழகு பார்த்தார்.
"எது உண்மையான மகுடாபிஷேகம்?' என்பதை "வெள்ளி நாக்கு படைத்தவர்' என்று புகழ்ந்து கூறப்படும் சீனிவாச சாஸ்திரி தன்னுடைய ராமாயண பேருரைகளில் குறிப்பிட்டுள்ளார். அக்கருத்து, இவ்விடத்தில் சிந்திக்கத் தக்கது. ""ராம பிரானையும், சீதா பிராட்டியையும் நமது இதயத்தில் வைத்து அன்றாடம் மகுடாபிஷேகம் செய்ய வேண்டும். அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை நாமும் பின்பற்ற வேண்டும் என்ற நினைப்பே நம்மை நல்வழியில் செலுத்தி, நமது வாழ்க்கையை மேன்மையடையச் செய்யும். இதனால் என்றைக்கும் நாம் தவறான பாதையில் செல்லமாட்டோம். அதுவே சக்ரவர்த்தி திருமகனுக்கு நாம் செய்யும் உண்மையான மகுடாபிஷேகம்'' என்று கூறியிருக்கிறார்.
நமது மனமே அயோத்தி ஆகட்டும்! அதில் சரயூ நதி போல் வெள்ளமாக "ராம நாம பிரவாகம்' கரை புரண்டோடட்டும்! நமது இதயக் கோயிலில் சீதையும், ராமபிரானும், லட்சுமணனும், பரதனும், சத்ருக்னனும், ஆஞ்சநேய சுவாமியும் நிரந்தரமாக எழுந்தருளட்டும். ராமனின் கருணைத் திறனை எண்ணி கண்ணீர் உகுப்பதே அவருக்கு மகுடாபிஷேகம் செய்வதாக ஆகட்டும்! இதுவே பகவானுக்கு நாம் செய்யும் உண்மையான பட்டாபிஷேகம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...