சர்வதேச அரங்கில் சொந்த நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் காங்கிரஸ்! - பிரதமர் மோடி
உலகளாவிய செய்யறிவு உச்சி மாநாட்டில் காங்கிரஸார் சட்டையின்றிப் போராட்டத்தில் ஈடுபட்டதற்கு கண்டனம்!


மீரட் : தில்லியில் நடைபெற்ற உலகளாவிய செய்யறிவு உச்சி மாநாட்டில் இந்திய இளைஞா் காங்கிரஸார் சட்டையின்றிப் போராட்டத்தில் ஈடுபட்டதற்கு கண்டனம் வலுக்கிறது. இது குறித்து, கருத்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சி சித்தாந்த ரீதியாகத் தரம் குறைந்து மோசமாகியிருப்பதை அக்கட்சியின் மேற்கண்ட செயல்பாடுகள் வெளிக்காட்டுவதாக விமர்சித்தார்.
பிகாரைச் சோ்ந்த இளைஞா் காங்கிரஸின் (ஐ.ஒய்.சி) தேசிய செயலாளா் கிருஷ்ணா ஹரி, பீகாா் ஐ.ஒய்.சி மாநில செயலாளா் குந்தன் யாதவ்,உத்தரபிரதேச ஐ.ஒய்.சி மாநிலத் தலைவா் அஜய் குமாா் மற்றும் தெலங்கானாவைச் சோ்ந்த நரசிம்ம யாதவ் ஆகியோர் செயற்கை நுண்ணறிவு தாக்க (ஏ.ஐ இம்பாக்ட்) உச்சி மாநாடு நடந்த இடத்தில் வெள்ளிக்கிழமை(பிப். 20) சட்டையின்றி போராட்டம் நடத்தினர். இதையடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டதற்கு அக்கட்சிக்கு கண்டனம் வலுக்கிறது.
இது குறித்து, மீரட் நகரில் நமோ பாரத் ரயில் சேவையை ஞாயிற்றுக்கிழமை(பிப். 22) தொடக்கிவைத்த பிரதமர் மோடி பேசியதாவது : “இந்தியாவை வளர்ந்த நாடாக கட்டமைக்க குடிமக்கள் இரவு பகல் பாராமல் உழைத்து வரும் வேளையில், சில அரசியல் கட்சிகளால் நாட்டின் வெற்றியை சகித்துக்கொள்ள முடியவில்லை. 80-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் சுமார் 20 நாட்டின் தலைவர்களும் தில்லியில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் பங்கேற்றிருப்பது நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளது.
ஆனால், காங்கிரஸ் என்ன செய்திருக்கிறது? இந்தியா நடத்தும் உலகளாவிய நிகழ்வை அவர்களின் வெட்கக்கேடான மற்றும் அசிங்கமான அரசியலுக்காகப் பயன்படுத்தியிருக்கிறது.
காங்கிரஸ் தலைவர்கள் வெளிநாட்டு விருந்தினர்கள் முன்னிலையில் ஆடைகளைக் களைந்தபடி வருகை தந்தனர். காங்கிரஸ் கட்சி சித்தாந்த ரீதியாகத் தரம் குறைந்து மோசமாகியிருக்கிறதையே இது காட்டுகிறது. நான் காங்கிரஸ் தலைவர்களிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன் - நீங்கள், உங்கள் சுயரூபம் ஏற்கெனவே நாட்டில் வெளிப்பட்டுவிட்டது. அதன்பின், அதை மேலும் கெடுத்துக்கொள்ள வேண்டிய தேவை என்ன இருக்கிறது?
சொந்த நாட்டுக்கே தலைகுனிவை ஏற்படுத்தும் செயலில் அக்கட்சி ஈடுபட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர்கள் என்னை வெறுக்கிறார்கள். அவர்கள் எனக்கு சவக்குழி தோண்டத் துடிக்கிறார்கள். எமது தாயாரை அவமரியாதை செய்யவும் அவர்களுக்கு எவ்வித தயக்கமும் இல்லை. அவர்கள் பாஜகவை எதிர்க்கிறார்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணியை எதிர்க்கிறார்கள். அரசியலுக்கு இவையெல்லாம் அவசியமானதாக இருக்கலாம். அதை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. நாங்கள் இவையனைத்தையும் சகித்துக்கொள்வோம்.
ஆனால், உலகளாவிய செய்யறிவு உச்சி மாநாடு பாஜகவின் நிகழ்ச்சி அல்ல. இது, தேச நிகழ்ச்சி என்பதை காங்கிரஸ் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
உங்களுக்குப் பிரதமர் நாற்காலியில் உட்கார வேண்டுமானால், முதலில் மக்களின் மனதை கட்டாயம் வெல்ல வேண்டும். அதைவிடுத்து, நாடாளுமன்றத்தில் பெண் எம். பி. க்களை பிரதமரின் இருக்கையை நோக்கிச் செல்ல வைப்பதன் மூலம் எல்லாம் நீங்கள் நாட்டின் பிரதமராகும் திட்டத்தை நிறைவேற்ற முடியாது. நாட்டின் சுமையாக காங்கிரஸ் மாறிவிட்டது” என்றார்.
மேலும், காங்கிரஸின் செயலுக்கு கண்டனம் தெரிவித்த பிற எதிர்க்கட்சிகளின் செயலையும் அவர் குறிப்பிட்டுப் பாராட்டியும் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...