டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

மறுமையிலும் நீயே...

பொருளீட்டுதல் முதலான காரணங்களை முன்வைத்துத் தலைவன் தலைவியைப் பிரிந்து செல்ல நேரிடும். அப்போது அத்தலைவனின் பிரிவைத் தாங்கிக்கொள்ள இயலாத தலைவியின் மிகு துயர் "பிரிவாற்றாமை' எனப்பெறும்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:07 am

முனைவா் ம.பெ.சீனிவாசன்

பொருளீட்டுதல் முதலான காரணங்களை முன்வைத்துத் தலைவன் தலைவியைப் பிரிந்து செல்ல நேரிடும். அப்போது அத்தலைவனின் பிரிவைத் தாங்கிக்கொள்ள இயலாத தலைவியின் மிகு துயர் "பிரிவாற்றாமை' எனப்பெறும்.

திருக்குறளில் பிரிவாற்றாமை அதிகாரத்தில் ஒரு குறள், நாடகக் காட்சியாய் நம்முன் விரிகிறது. அவளைப் பிரிந்து செல்லும் முடிவுக்கு வந்த அவன், என்றுமில்லாத அளவுக்கு அவளிடம் காட்டிய பரிவு, அவனது பிரிவை முன் உணர்த்தும் குறிப்பாய் அமைந்துவிட்டது. அந்தக் குறிப்புணர்ந்த தலைவி "நான் சென்று வருவேன்' என்று தலைவன் வாய் திறப்பதற்கு முன்பே, அவனை அவள் முந்திக்கொண்டு விடுகிறாள் (குறள்-1151).

"தலைவ! போகப்போவதில்லை என்பதைச் சொல்வதாக இருந்தால் எனக்குச் சொல்லுக. நான் போய் விரைந்து வருகிறேன் என்ற உன் "வல்லவரவு' பற்றிய செய்தியை நீ திரும்பி வரும்போது யார் மாளாதிருப்பார்களோ அவர்களிடமே சொல்லிவிட்டுப் போ' என்கிறாள். நீ பிரிந்த கணமே இறந்துவிடுவேன்' என்பதைச் சொல்லாமல் சொல்கிறாள் தலைவி.

குறள் காட்டும் இந்நாடகக் காட்சியை மேலும் விளக்கிக் காட்டுகிறது காலத்தாற் பிற்பட்ட நாலடி வெண்பா ஒன்று. தலைவி அவனை மகிழ்ச்சியுடன் வாழ்த்தி வழியனுப்புவது போலப் பாடல் தொடங்குகிறது. "நீ எம்மைப் பிரிந்து போகும் வழி முழுவதும் உனக்குக் காவல் நிறைந்த வழியாகக் கடவது; பொருள் வருவாயும் மிகுவதாக; உன் செல்வமும் மேன்மேலும் பெருகிச் சிறப்பதாக!'

""செல்லும் நெறியனைத்தும் சேம நெறியாக

மல்க நிதியம் வளம் சிறக்க''

என்று வாழ்த்திய தலைவி, பாட்டை எப்படி முடிக்கிறாள் தெரியுமா?

""... .... ... வெல்லும்

அடல்தேர் விடலை அகன்றுறைவது ஆங்கோர்

இடத்தே பிறக்க வியாம்''

"வெற்றியையும் வலியினையும் உடைய தேர் வீரனே, நீ அங்ஙனம் எம்மைப் பிரிந்து பெருஞ் செல்வமுடன் வாழும் அவ்விடத்தில், உன்னை அடையும் பொருட்டு யாமும் வந்து அங்கே பிறப்போமாக' என்கிறாள்.

உன்னைப் பிரிந்ததும் உன் பிரிவுக்கு ஆற்றாமல் செத்து மடிவேன்; அவ்வாறு செத்து மடிந்தாலும் "மறுமையிலும் நீயே' என் காதலன் ஆகும் பொருட்டு அங்கும் வந்து பிறப்பேன் என்கிறாள். வாழ்த்துடன் தொடங்கி, அவலத்துடன் முடியும் இந்நாடகக் காட்சி, குறட்பாவின் விரிவே எனலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.